Skip to main content

திகில் கூட்டும் இரவுகள்

பொதுவாகவே, வெட்பப் பிரதேசமான நம் நாட்டில் மிதமான தட்பவெட்ப நிலையுள்ள இரவுகளே அதிகம் விரும்பப் படுபவை. அதுவும் பல நாட்களில் காலையில் நாம் எழும் போது, இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க வசதியாக, சூரியன் தாமதமாக உதிக்கக் கூடாதா என்பது போன்ற எண்ணங்கள் தோன்றும்.

அதே சமயம் சில நாட்கள் எப்போதடா இந்த இரவு முடியும், விடியற்காலை சீகிரமாக வருமா என்று மனம் ஏங்கும் நிலை ஏற்பட்டு விடும். குறிப்பாக உடல் நிலை சரியில்லாத காலங்களில், பகலை விட இரவுதான் அதிக பயமூட்டுவதாகவே அமையும். "நோய்க்கும் பேய்க்கும் இரவில்தான் கொண்டாட்டம்" என்று கூட நம்மூரில் சொல்வார்கள்.

அதிலும் கூட நமது குழந்தைகளுக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லா விடில் அதுவும் இரவில் ஏதேனும் பிரச்சினைகள் வந்து விடில், நடு இரவு சிம்ம சொப்பனமாகவே திகழ்கிறது.

அசுத்தங்களும் கலப்படங்களும் மிகுந்த மும்பை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்களுக்கு முக்கியமன ஒரு பிரச்சினை பால். பாலில் கலப்படம் அதுவும் சுகாதாரமற்ற நீரின் உதவியால் கலப்படம் செய்பவர்களின் மீது பல முறை போலீஸ் நடவடிக்கை எடுத்தாலும் அவர்கள் மட்டும் தமது திருப்பணியை நிறுத்துவதே இல்லை.

இவர்களின் கலப்படத்தால் நேற்று பாதிக்கப் பட்டது எனது ஐந்து வயது குழந்தை. லேசான வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சலால் இரவு முழுதும் குழந்தை அவதிப் பட தூக்கம் முழுமையாக பறி போனது எங்களுக்கு.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அடிக்கடி உடல் நலக் குறைபாடு ஏற்படுவது சகஜம்தான் என்றாலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்சொன்னது போல "இதெல்லாம் சகஜம்தான்" என்ற எங்கள் நினைப்பும், குழந்தையின் உடல் நலக் குறைவை துவக்கத்திலேயே சரியாக அடையாளம் கண்டு பிடிக்காத மருத்துவரின் அலட்சியமும் சேர்ந்து சாதாரண விஷயத்தினை மிகுந்த அபாயகரமாக்கி விட்டது.

அந்த சோதனையில் இருந்து மீண்டாலும், அது ஒரு வித பய உணர்வை எங்கள் மனதில் சேர்த்து வைத்து தைத்து விட்டது. இதனால், அந்த நிகழ்வுக்கு பின்னர், ஏதேனும் சிறு காய்ச்சல் என்றால் கூட பழைய நினைவுகளை தூண்டி பயத்தை உண்டாக்கி விடுகின்றன.

குழந்தையின் உடல்நலம் குறையும் போது, தாயை விட தந்தையின் பொறுப்பு அதிகமாகி விடுகிறது. குழந்தை படும் வேதனை கண்டு துயரப் படுவதும், எப்போது சரியாகும் என்று கவலைப் படுவதுமே அன்னையின் பொறுப்பாக, தந்தைக்கோ மேற்சொன்னவற்றுடன் சேர்த்து, பயப் படாமல் இருப்பது போல வெளியே காட்டிக் கொள்வது, அடுத்து என்ன செய்வது என்று சிந்திப்பது போன்ற கூடுதல் பொறுப்புக்களும் உண்டு. ஒரு முறை கவலையாக இருந்த என்னிடம் எனது மூத்த அதிகாரி ஒருவர் கூறியது இது. "உன்னுடைய முக மாற்றங்கள் உன் குடும்பத்தின் மனநிலையை வெகுவாக பாதிக்கும். எனவே கடினமான தருணங்களில் முகத்தில் கவலையை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டியது உன் பொறுப்பு. எல்லா கெட்ட விஷயங்களும் கடந்து போகும் என்ற நம்பிக்கை மனதில் வலுவாக இருப்பது மிகவும் அவசியம்"

எனது தந்தை மருத்துவமனையில் பணி புரிந்து வருவதால் , சிறுவயதில் இருந்தே மருத்துவமனைகள் அந்நியமாக தோன்றியதில்லை. ஆனால் தன் குடும்பத்திற்கென வரும் பிரச்சினைகள் அதுவும் குழந்தை சம்பத்தப் பட்ட தருணங்களின் போது மருத்துவமனையில் மனம் இயல்பாக செயல்படுவதில்லை . மும்பை போன்ற நகரங்களில் இருபத்து நான்கு மணி நேர மருத்துவமனைகள் இருந்தாலும், பகலில் செல்வதைப் போல நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனைக்கு செல்வது என்பது இயல்பான ஒரு விஷயமாக இருப்பதில்லை.

தாறுமாறான சந்தைகளின் போக்கு தரும் மன அயர்ச்சி காரணமாக, "எப்போதடா வீட்டுக்கு போய் நிம்மதியாக தூங்கலாம்" என்று ஏங்கும் நமக்கு இது போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் தூக்கத்தை நம்மிடம் இருந்து பறித்து விடுகின்றன. கண்ணை பிடுங்கும் தூக்கம் ஒரு புறம், என்ன இப்படி ஆகி விட்டதே என்ற வருத்தம் ஒரு புறம், உள்ளுக்குள் எவ்வளவு பயம் இருந்தாலும் "அதெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை, நாளை சரியாகி விடும்" என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஒரு புறம், நம்மை வாட்டி எடுக்கின்றன.

இது போன்ற தருணங்களில், இரவு முழுக்க நமக்கு தோன்றும் ஒரே சிந்தனை, "இந்த இரவு எப்போது முடியும்?"

பொதுவாகவே காலையில் அலாரம் அடிக்கும் போது "ச்சே! அதற்குள்ளே விடிந்து விட்டதா" என்று வருத்தப் பட்டுக் கொண்டு, இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க முடியாதா என்ற ஏக்கத்துடன் எழுந்திருக்கும் நான் இன்று காலையில் சூரிய வெளிச்சம் வந்ததும் "அப்பாடா" என்றுதான் நிம்மதி பெருமூச்சு விட்டேன். சொல்லப் போனால், விடிந்த பின்னர்தான் ஒரு குட்டித் தூக்கம் போட முடிந்தது.

இரவின் பயங்கள் அத்தனையும் சூரியனைக் கண்டதும் சட்டென விலகிப் போகின்றன. குழம்பிப் போன மனது மீண்டும் தெளிவாக சிந்திக்க ஆரம்பிக்கிறது. உடல் சோர்வு குறைந்தது போல தோன்றுகிறது.

வழக்கம் போல "இது ஒன்றுமில்லை, சாதாரண வயிற்றுக் கோளாறுதான், சீக்கிரம் சரியாகி விடும்" என்று டாக்டர் சொல்ல, அங்குள்ள பொம்மைகளை கண்டதும் சுறுசுறுப்பாக குழந்தை விளையாட ஆரம்பிக்க, மனதிலிருந்த பாரம் இறங்குகிறது. இன்றைக்கு மார்கெட் எப்படி இருக்கும் என்று வழக்கமான சிந்தனைகள் துவங்குகின்றன.

பின்குறிப்பு: தூக்கம் பறி போன இரவுக்கு பின் வரும் பகல் கூட மிகவும் நீளமானதுதான். அதுவும் வீட்டுக்கு சீக்கிரம் போக வேண்டும் என்று எண்ணும் நாளில்தான் அதிக வேலை வருகிறது. அப்புறம் ஒரு முக்கிய விஷயம். இந்த பதிவு கூட கொஞ்சம் தூக்கக் கலக்கத்துடன் எழுதப் பட்டதுதான்.

நன்றி.

Comments

KARTHIK said…
ஆமாம் குழந்தைங்க எதுக்கு அழுவுராங்கன்னே தெரியாது அதுவும் இரவு நேரங்கள்னா சொல்லவே வேண்டாம் அதைவிட வேற கொடுமையே இல்லை.

// "இது ஒன்றுமில்லை, சாதாரண வயிற்றுக் கோளாறுதான், சீக்கிரம் சரியாகி விடும்" என்று டாக்டர் சொல்ல, அங்குள்ள பொம்மைகளை கண்டதும் சுறுசுறுப்பாக குழந்தை விளையாட ஆரம்பிக்க,//

இப்போ நல்லா இருக்காள்ல.
கம்முனு பால்பவ்டர் பயன்படுத்துங்க.

//தூக்கம் பறி போன இரவுக்கு பின் வரும் பகல் கூட மிகவும் நீளமானதுதான்.//

ஆமாம் ஒரு நிமிசம் கூட ஒரு நாள்மாதிரி போகும்.
Maximum India said…
நன்றி கார்த்திக்

//ஆமாம் குழந்தைங்க எதுக்கு அழுவுராங்கன்னே தெரியாது அதுவும் இரவு நேரங்கள்னா சொல்லவே வேண்டாம் அதைவிட வேற கொடுமையே இல்லை.//

உண்மைதான் கார்த்திக்

//இப்போ நல்லா இருக்காள்ல.//

இப்போ பழையபடி அட்டகாசம்தான். நமக்குத்தான் தூக்கம் போய் ஒரு மாதிரியா இருக்கு.

//கம்முனு பால்பவ்டர் பயன்படுத்துங்க.//

நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

//ஆமாம் ஒரு நிமிசம் கூட ஒரு நாள்மாதிரி போகும்.//

மனிதனுக்கு எல்லாமே அனுபவம்தான் இல்லே?

அக்கறையான விசாரிப்புக்கு நன்றி கார்த்திக் :)
Unknown said…
நல்ல எழுத்து நடை ,,,,,,
குழந்தைகள் புரியாமல் அழும்போது நமக்கும் கலவரம் ஆகத்தான் இருக்கும்.
பெரியவர்களாவது என்ன பிரச்சினை என்று கேட்டு தெரிந்து கொள்ளலாம். குழந்தைகளிடம் எப்படி.?
இதுபோல சமயங்களில் சம்பந்தப்பட்ட குழந்தைகள் தாய் அல்லது தந்தையை தவிர மற்ற யாரையும் அண்ட விடாது.
எங்களது கூட்டு குடும்பமாகையால் இது ஒரு தினப்படி நிகழ்ச்சி.

குழந்தை இப்போது நலம்தானே?
Maximum India said…
நன்றி அருள்ராஜ்
Maximum India said…
நன்றி அசோசியேட்

//குழந்தைகள் புரியாமல் அழும்போது நமக்கும் கலவரம் ஆகத்தான் இருக்கும்.
பெரியவர்களாவது என்ன பிரச்சினை என்று கேட்டு தெரிந்து கொள்ளலாம். குழந்தைகளிடம் எப்படி.?//

உண்மைதான்.

//இதுபோல சமயங்களில் சம்பந்தப்பட்ட குழந்தைகள் தாய் அல்லது தந்தையை தவிர மற்ற யாரையும் அண்ட விடாது.
எங்களது கூட்டு குடும்பமாகையால் இது ஒரு தினப்படி நிகழ்ச்சி.//

இது போன்ற சமயங்களில் கூட்டுக் குடும்பங்களாக இருப்பது ஒரு பெரிய மன தெம்பைக் கொடுக்கும். தனியாக அதுவும் எங்களைப் போல சொந்த ஊரை விட்டு வெகு தூரம் தள்ளி இருப்பவர்களுக்கு இது போன்ற தருணங்கள் சிரமமாகவே இருக்கும்.

//குழந்தை இப்போது நலம்தானே?//

நலமே. ஆனால் இரண்டு நாட்கள் தொடர்ந்து தூக்கம் போய் எனக்குத்தான் அசதியாக உள்ளது. :)

நன்றி.
கலப்படம் எனபது பிடியில்லாத கத்தி, அது நம்மையும் நம் குடும்பத்தையும் கூட தாக்கலாம் என்று ஏன் உணர மறுக்கிறார்கள்.

உங்களுக்கு நேர்ந்த சங்கடத்திற்கு எனது வருத்தங்கள்!
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

//கலப்படம் எனபது பிடியில்லாத கத்தி, அது நம்மையும் நம் குடும்பத்தையும் கூட தாக்கலாம் என்று ஏன் உணர மறுக்கிறார்கள்.//

பணம் சம்பாதிக்க எதுவும் தவறில்லை என்ற எண்ணம் நமது சமூகம் முழுக்க ஊடுருவியிருப்பது வருந்தத்தக்க ஒரு விஷயம். பால் போல தூய்மை என்பார்கள். இப்போது பால் போல கலப்படம் என்று சொல்லலாம்.

//உங்களுக்கு நேர்ந்த சங்கடத்திற்கு எனது வருத்தங்கள்!//

விசாரிப்புக்கு நன்றி வால்பையன்.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...