இந்த வாரம், என்னால் பெரிது மதிக்கப் பட்டு வந்த, சென்னையைச் சேர்ந்த ஒரு கல்லுரியின் கருத்துக் கணிப்பு தலைப்பை (தமிழர்களுக்கு பிடித்த சினிமா நடிகர் யார்?) செய்தி தாள்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
ஊடகங்கள் மட்டுமே அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோருக்கு பெருமளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்று எண்ணியிருந்த போது, சிறந்த கருத்துகளை மக்களுக்கு சொல்ல வேண்டிய சில நல்ல கல்லூரிகள் கூட ஊடகங்களின் பாணியை பின் பற்றுவது கவலை அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது.
மக்கள் விரும்புகிறார்கள் என்பதினால்தான் இத்தகைய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பவர்களுக்கு ஒரு கேள்வி. உங்கள் குழந்தைகள் விரும்புகிறார்கள் என்பதற்காக, சுகாதாரமற்ற, உடலுக்கு ஒவ்வாத உணவுகளைக் கொடுப்பீர்களா?
மேலும், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் மிக அதிக அரசியல் பலம், மக்கள் செல்வாக்கு, பதவி மற்றும் பண பலம் கொண்டவர்கள். அவர்கள், நம்மைப் போன்ற சாமான்யர்கள், கவலை மற்றும் அக்கறை காட்ட தேவை இல்லாத உயரத்தில் இருப்பவர்கள். நாம் நம்மைப் பற்றியும், நம்மையும் விட கீழே, அதிகம் சுரண்டப் பட்ட (படுகின்ற) மக்களைப் பற்றி மட்டும் கவலைப் பட்டால் போதுமானது.
அது மட்டுமல்ல, இன்றைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள், பாரபட்சமானவையாகவும், ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும் மட்டுமே நடத்தப் படுகின்றன. மற்றவை கூட, மக்களின் வெளிமனதைப் படிக்க உதவும் ஒரு தொழிற் நுட்ப வழி முறையாகவே இருக்கின்றன. சமூக அக்கறைக் கொண்ட கருத்துக் கணிப்புகளை சிலர் நடத்தினாலும் அவற்றை ஊடகங்கள் வெளிக்கொணர முன் வருவதில்லை
சமூக அக்கறை கொண்ட ஒரு கருத்துக் கணிப்பு என்பது, அன்றாட சமூக பொருளாதார பிரச்சினைகளினால் ஒட்டடை அண்டிப் போன சாதாரண மக்களின் இதயங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் பல நல்ல விஷயங்களை வெளிக் கொண்டு வருவதே ஆகும். அது மட்டுமல்ல, ஒரு சிறந்த கருத்துக் கணிப்பினால், மக்களின் ஆழ்மனதில் சிறந்த கருத்துகளை விதைக்கவும் முடியும்.
சமூக அக்கறைக் கொண்ட கருத்துக் கணிப்புகளுக்கான, சில உதாரணங்கள் கீழே.
இந்திய மக்களின் அடிப்படை தேவை?
௧. தொடக்கக் கல்வி.
௨. பொது சுகாதாரம்.
௩.சுகாதாரமான குடிநீர் வசதி.
௪.வறுமை நீக்கம்.
இந்திய அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினை?
௧. இன/மதக் கலவரங்கள்
௨. தீவிர வாதம்.
௩. பிரிவினை வாதம்
௪. சமூக விரோத நடவடிக்கைகள்
விவசாயிகள் வாட்டத்திற்கு முக்கிய காரணம்?
௧. போதுமான கடன் வசதி இல்லை.
௨. விளை பொருட்களுக்கு சரியான விலை இல்லை.
௩. சேமிக்க போதுமான வசதி இல்லை.
௪. சந்தைக்கு கொண்டு போக வசதிகள் இல்லை.
தொழிற் வளர்ச்சிக்கு பெரும் தடையானவை?
௧. மின் பற்றாக்குறை
௨. கட்டுமான வசதிகள் குறைபாடு.
௩. அரசாங்க ஊழல்.
௪. போக்குவரத்து வசதி குறைவு.
மின் வெட்டை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
௧. புதிய மின் உற்பத்தி ஆலைகள்
௨. மின் திருட்டு மற்றும் இழப்புகளை தவிர்த்தல்
௩. மான்ய உதவியுடன் மரபு சாரா எரிசக்தி
௪. சிறந்த விநியோக முறை.
மேலும் பல சொல்லிக் கொண்டே போகலாம். இந்த விஷயங்களுக்காக கருத்துக் கணிப்பு நடத்த முன் வருவோரை வாழ்த்தி வரவேற்போம்.
இப்படி உடனடியாக அக்கறை காட்ட வேண்டிய விஷயங்கள் பல இருக்கும் போது, பளபளக்கும் உணவு வகைகளை, நிலைக் கண்ணாடியில் காட்டி, நம்மை பசி மறக்கச் செய்யும் மோடி மஸ்தான் வேலையினை, சமூக பொறுப்பு உள்ள ஊடகங்கள் மற்றும் கல்லூரிகள் செய்ய வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், மேற்குறிப்படப் பட்டவை தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்றும் அரசாங்கம் மட்டுமே கவனிக்க வேண்டிய (கவலை கொள்ள வேண்டிய ) பிரச்சினை என்பவர்க்கும் ஒரு செய்தி. சூரியன் மறையாத நாடு எனக் கருதப் பட்ட ஒரு நாட்டை நம்மை போன்ற அடிமை நாடு வெல்ல முடியாது என்று ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் இங்கே வாழ்ந்தவர்கள் (ஊடகங்கள் கூட) நினைத்திருந்தால் நமக்கு இன்று சுதந்திரம் இருக்காது.
சிந்திப்போம்
மீண்டும் சந்திப்போம்
Comments
'நீங்கள் சொல்வதை படிக்க நன்றாக இருக்கின்றது. யார் செய்யப்போகின்றார்கள் என்பதுதான் புரியவில்லை.'
Here is the link to the story: http://www.tamilish.com/story/8750
~ William James
You gave your voice over this issue. let us see what happens???