Skip to main content

கட்டுப்பாடான வேகம் நன்று




சிறிது காலத்திற்கு முன்பு, நான் என் குடும்பத்துடன் காரில் ஒரு விரைவு நெடுஞ்சாலையில் (Express Highway) சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே மிக அதிக வேகத்தில் (சுமார் 110-120 கி.மீ.) சென்ற பொழுது, ஒரு கனரக வாகனம் தடம் (lane) மாறி திடீரென குறுக்கே வந்து விட்டது. ஒரு பெரும் விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பியது தம்பிரான் புண்ணியம்.








இது நடந்து சில காலத்திற்கு பின், என் நண்பர் ஒரு தேசிய நெடுஞ்சாலையில், காரில் மிக வேகமாக சென்ற போது, சாலைப் பணிக்காக குறுக்கே வைக்கப் பட்டிருந்த ஒரு தடுப்பில் (கவனக் குறைவினால்) மோதி தனது குடும்பத்துடன் உயிரிழந்தார்.




சீரான, நேரான சாலைகள், லேசாக அழுத்தினால் பறக்கக் கூடிய நவீன வகை கார்கள் நமது மனதில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி மிக அதிக வேகத்தில் செல்ல உந்துகின்றன. முதலில் சாலையில் கவனமாக இருந்தாலும், தொடர்ந்து சில நேரம் அதிக வேகத்தில் செல்லும் போது, அயர்ச்சினாலும் அதீத தன்னம்பிக்கையினாலும், கவனக் குறைவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகி விடுகிறது. அப்போது, சாலையில் திடீரென ஏற்படும் சில எதிர்பாராத குறுக்கீடுகளால் பெரும் விபத்து நேரிட்டு விடுகிறது.


இந்த நிலை சாலைப் பயணத்திற்கு மட்டுமல்ல, ஒரு வகையில் வாழ்க்கைப் பயணத்திற்கும் பொருந்தும்.


கல்வி மற்றும் பணிகளில் பெரும் வெற்றிகள், அதிக வருமானம், பாராட்டு புகழுரைகள் இளம் வயதிலேயே கிட்டும் போது ஒரு வித மனக் கிளர்ச்சி ஏற்படுகிறது. அதனால் உருவாகும் அதீத தன்னம்பிக்கை வாழ்கையில் சற்று அதிகப்படியான வேகத்தில் செல்ல உந்துகிறது.


விளைவு, அதிக அனுபவம் இல்லாத துறையில் அகலக் கால் பதித்தல், தனது அபாயம் தாங்கும் திறனை மீறிய அளவுக்கு தொழில் (பங்கு மற்றும் மனை வியாபாரம்) முதலீடுகள், வருமானத்திற்கு மீறிய செலவினங்கள் மற்றும் திரும்ப கட்ட முடியுமா என்று உறுதியாக சொல்ல முடியாத அளவிற்கு கடன் வாங்குதல்.


முன்னமே சொன்ன படி, அதிகப்படியான வேகத்தில் சற்று அதிக நேரம் தொடர்ந்து பயணித்தால் கவனக் குறைவு மற்றும் அயர்ச்சி ஏற்படுகிறது. ஏதேனும் சிறு குறுக்கீடு ஏற்பட்டாலும் வாழ்கை (வண்டி) நொறுங்கி போய் விடுகிறது. சமீபத்தில், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நிகழ்ந்த சில தற்கொலைகளுக்கு (அதுவும் குடும்பத்துடன்) இதுவே காரணமாக இருக்கக் கூடும்.




நீங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் செல்லுகிறீர்களா? சுய பரிசோதனை செய்து கொள்ள சில கேள்விகள் .




உடற்பயிற்சி/நடைபயிற்சி/மனப்பயிற்சி செய்ய நேரமில்லையா?

செய்தித்தாள்களைப் பார்க்க நேரமில்லையா?

ருசி தெரியாமல் உணவு உண்கிறீர்களா?

அலுவலத்தில் அல்லது வெளியில் நண்பர்களோடு பேசி சில நிமிடங்கள் சிரிக்க முடிய வில்லையா?

உங்களுக்கு பிடித்த விஷயம் செய்ய நேரமில்லையா?

உங்கள் குடும்பத்துடன் குறிப்பாக உங்கள் குழந்தையுடன் சிறிது நேரம் செலவிட முடிய வில்லையா?

அவர்களை வெளியே அழைத்து செல்ல நேரமில்லையா?

உறவினர் நண்பர்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரமில்லையா?






இந்த கேள்விகளில், பெரும்பாலானவற்றிக்கு உங்கள் பதில் ஆமாம் என்று இருந்தால் நீங்கள் கவனிக்கப் படவேண்டியவர். உங்கள் வேகத்தினை உடனடியாக சுய கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவது நல்லது.






பெற்றோரின் வழிநடத்துதலில் இருந்து வெளியே வந்து சில காலமே ஆகி இருக்கும் நம் போன்ற இளையவர்கள் ஒரு விஷயம் புரிந்து கொள்ள வேண்டும். வேகம் நமது கட்டுக்குள் இருக்கும் போது மட்டுமே வாழ்க்கைப் பயணம் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதுடன் நிறைவாகவும் இருக்கும்.




சிந்திப்போம்.



மீண்டும் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...