Saturday, March 14, 2009

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?


உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம்.

முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம்.

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும்.

மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாதுகாப்பு, மாநில அரசுகளின் பொறுப்பு ஆகும். இந்த போட்டி இடங்களில் உள்ள மாநில அரசுகள் தேர்தல் முடியும் வரை ஐபிஎல் போட்டிகளுக்கென தனி போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறி விட்டன. அப்படி பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றால், மத்திய அரசு அதிக மத்திய காவல் படைகளை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றன. அதிக பாதுகாப்பு படைகள் கைவசம் இல்லாத காரணத்தினால்தான் மத்திய அரசு ஐபிஎல் தேதிகளை தள்ளி வைக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளது. எனவே போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும்.

இந்த வாதத்திற்கு சில அரசியல் உள்நோக்கங்களும் கற்பிக்கப் படுகின்றன. ஐபிஎல் தலைவரான லலித் மோடி பிஜேபி சார்புடையவர் என்பதால் அவருக்கு காங்கிரஸ் அரசு இடைஞ்சல் செய்கிறது என்று கூறப் படுகிறது.

(ஆனால் என்னைப் பொருத்த வரையில், பணத்திற்கும் கிரிக்கெட்டிற்கும் இந்திய அரசியல்வாதிகள் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. எனவே, இந்த இரண்டும் சேர்ந்து கூட்டாக அமைந்துள்ள ஐபிஎல் போட்டிக்கு அரசியல் ரீதியான தடைகள் வருமா என்பது ஒரு பெரிய கேள்விக் குறிதான்.)

இப்போது ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்கக் கூடாது என்று சொல்பவர்கள் முன்வைக்கும் வாதங்களைப் பார்க்கலாம்.

இந்த போட்டிகள் பல மாதங்களுக்கு முன்பே நிச்சயிக்கப் பட்டவை. இப்போது தள்ளிவைத்தால், பல சர்வதேச அணி வீரர்களால் (தங்கள் தேசிய அணியில் விளையாட வேண்டியிருப்பதால்) இந்த போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது. அந்த நிலையில் ஐபிஎல் அமைப்பாளர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படும்.

தீவிரவாத விவகாரத்தில், இன்றைக்கு உலக அளவில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே தட்டில் வைத்து பார்க்கப் படுகின்றன. இப்போது, இந்த போட்டிகளை தள்ளி வைத்தால் இந்தியாவின் பாதுகாப்பு என்பது உலக அளவில் கேள்விக் குறியான ஒன்றாகி விடும். இது இந்தியாவின் தன்மானத்திற்கு இழுக்கு ஆகும்.

மேலும் இந்த போட்டிகள் தள்ளி வைக்கப் பட்டால், அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் (2011) இந்தியாவில் நடத்த அனுமதி கிடைக்காமல் போய் விடலாம். மேலும் பல சர்வதேச போட்டிகளை இந்தியா நடத்துவதற்கு தடை வரலாம்.

எனவே எப்பாடுபட்டாவது இந்த போட்டிகளை குறித்த மாதங்களில் நடத்தி உலகிற்கு இந்தியாவின் வல்லமையை புரிய வைக்க வேண்டும்.

இந்த வாதங்களில் எது சரி என்று பார்ப்பதற்கு முன்னர், ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டதன் பின்னணியை நாம் பார்க்க வேண்டும்.

சென்ற ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (2007) இந்தியா படு தோல்வி அடைந்து திரும்பியபோது, ஜி நிறுவன தலைவரால் ஐசிஎல் என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. இந்தியாவில் கிரிக்கெட்டை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் 20-20 போட்டிகள் தொடங்கப் பட்டு வணிகரீதியாக குறிப்பிடத் தக்க வெற்றியைப் பெற்றன.

இந்திய மக்களின் கிரிக்கெட் ஆர்வத்தினை அப்படியே காசாக மாற்றுவதில் யாருக்கும் சளைக்காத, உலகின மிகப் பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பான, இந்திய கிரிக்கெட் வாரியம் சென்ற மாணவர்களின் கோடை விடுமுறை காலத்தில், ஐபிஎல் போட்டிகளை தொடங்கியது. இந்த போட்டிகள் வணிக ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. அந்த வெற்றியை தொடரவே, இந்த ஆண்டும் கோடை விடுமுறை காலத்தில் இந்த போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானம் செய்தது.

நடப்பு மக்கள் சபையின் வழக்கமான ஐந்தாண்டு காலம் ஆயுள் முடிந்து எப்போதுமே தேர்தல் நடைபெற மிகவும் உகந்த காலமாக கருதப் படும் ஏப்ரல் - மே மாதத்தில்தான் பொதுத் தேர்தல் நடத்தப் படுகின்றது. இது நன்கு தெரிந்திருந்தும் இந்த காலகட்டத்தில் (மாணவர் விடுமுறை காலம் என்ற ஒரே காரணத்தினால்) போட்டிகளை நடத்த தீர்மானித்தது முதல் தவறு என்று நான் கருதுகிறேன்.

இந்த போட்டிகள் சர்வதேச போட்டிகள் அல்ல என்பது முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது. பெரிய பணக்காரர்கள் தனிப்பட்ட முறையில் நடத்துகிற கிளப்புகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகள்தான் என்பதையும் இங்கு நினைவு கூற விரும்புகிறேன். ஒருவேளை இதுவே சர்வதேச போட்டிகள் என்றால், அவற்றை கொஞ்சம் கஷ்டப் பட்டாவது நடத்த வேண்டியது இந்தியாவின் கடமையாக இருந்திருக்கும்.


மேலும், எவ்வளவு பெரிய பண நஷ்டத்தையும் தாங்கக் கூடிய பண வல்லமை படைத்தது நமது கிரிக்கெட் வாரியம். எனவே நாட்டின் மிக முக்கிய நிகழ்வான பொதுத் தேர்தல்களுக்காக, போட்டிகளை தள்ளி வைப்பதன் மூலம் கொஞ்சம் நஷ்டத்தை சந்தித்தால் தவறில்லை என்று நினைக்கிறேன்.

எனவே, இந்த போட்டிகளை நடத்த வேண்டுமென்பதற்காக, மக்களின் மிக முக்கிய உரிமையான "பாதுகாப்பாக வாக்களிக்கும் உரிமைக்கு" எந்த ஒரு பங்கமும் நேராமல் பார்த்துக் கொள்வது மாநில மத்திய அரசுகளின் பொறுப்பு என்றே நினைக்கின்றேன்.

மேலும், வருங்காலத்தில் தனியார் நலனுக்காக நடத்தப் படும் போட்டிகளில் மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு பாதுகாப்பு படைகளை இலவசமாக அனுப்பி வைக்கக் கூடாது. இந்த போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க, அரசு உரிய "செலவினத் தொகையை" ஈடாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது தனிப் பட்ட கருத்து ஆகும்.

நன்றி.

28 comments:

பொதுஜனம் said...

தீர்ப்பு சரிதான். நாட்டின் தலைவிதி முக்யம்.அதற்காக சாயங்கால சந்தோசத்தை கொஞ்சம் தள்ளி வைத்தால் தப்பில்லை.மேலும் மாணவர்களின் தலைஎழுத்தை நிர்ணயிக்கும் february முதல் ஏப்ரல் வரை எல்லா வருடமும் போட்டிகளை ஒத்தி வைக்கலாம்.

குப்பன்.யாஹூ said...

Definitely Election is much more important than cricket match.

There is no hurry to have cricket match, we can have matches in June or July.(June, july no school exams as well)

Maximum India said...

நன்றி பொதுஜனம்

//நாட்டின் தலைவிதி முக்யம்.அதற்காக சாயங்கால சந்தோசத்தை கொஞ்சம் தள்ளி வைத்தால் தப்பில்லை.//

ஒரே நேரத்தில் இரண்டு பொழுதுபோக்குகளை (தேர்தல் கூட ஒரு நல்ல பொழுது போக்குதானே?) அனுபவிப்பதை விட தனித் தனியாக அனுபவிப்பது நல்லதுதானே? :)

//மேலும் மாணவர்களின் தலைஎழுத்தை நிர்ணயிக்கும் february முதல் ஏப்ரல் வரை எல்லா வருடமும் போட்டிகளை ஒத்தி வைக்கலாம்.//

மக்கள் பணத்தில் சுகபோக வாழ்வு நடத்தும் கிரிக்கெட் வாரியம் இந்த விஷயத்தில் கொஞ்சம் சமூகப் பொறுப்புடன் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

நன்றி.

Maximum India said...

அன்புள்ள குப்பன்_யாகூ!

சரியாக சொன்னீர்கள். ஐபிஎல் மாட்சுகளை ஜூன் ஜூலை மாதங்களில் நடத்த முயற்சி செய்யலாம்.

கருத்துரைக்கு நன்றி.

MCX Gold Silver said...

//வருங்காலத்தில் தனியார் நலனுக்காக நடத்தப் படும் போட்டிகளில் மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு பாதுகாப்பு படைகளை இலவசமாக அனுப்பி வைக்கக் கூடாது. இந்த போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க, அரசு உரிய "செலவினத் தொகையை" ஈடாக பெற்றுக் கொள்ள வேண்டும் //
தங்களுடைய கருத்தை அமோதிக்கிறேன்

Maximum India said...

கருத்துரைக்கு நன்றி dg

Anonymous said...

Good Shot. பல நேரங்களில் எங்களின் மனதிலிருக்கும் கருத்துக்களையே வெளிப்படுத்துகிறீர்கள். தங்கள் கருத்துக்கள் அனைத்தையும் ஆமோதிக்கிறேன்.

Maximum India said...

அன்புள்ள ஜாபர்!

பின்னூட்டத்திற்கு நன்றி.

//பல நேரங்களில் எங்களின் மனதிலிருக்கும் கருத்துக்களையே வெளிப்படுத்துகிறீர்கள். //

விருப்பு வெறுப்பு (Bias) அற்ற, நாட்டின் மீது அக்கறை உள்ள மற்றும் சமூகப் பொறுப்புள்ள ஒரு சராசரி இந்தியனாக யோசிப்பதால் இருக்கலாம். மேலும் பெரும்பாலான இந்தியர்களும் இதுப் போலத்தான் யோசிப்பார்கள் என்றும் நினைக்கிறேன்.

ஆனால் இன்றைக்கு, ஒரு சில வணிக நோக்கமுள்ள, மிகுந்த விருப்பு வெறுப்புக்களை (Bias & Prejudice) உள்ளடக்கிய சில தந்திரமான வியாபாரிகளின் கையில் பெரும்பாலான ஊடகங்கள் சிக்கிக் கொண்டிருப்பதால், அவை "இந்தியர்கள் இப்படித்தான்" என்ற ஒரு மாயையை உருவாக்குகின்றன. நம்மைப் போன்றவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்க வலைதளம் எனும் சிறந்த ஊடகம் உள்ளது. ஆனால், இதை உபயோகிக்க வசதி இல்லாதவர்களின் சிந்தனைகளை சரியான முறையில் வெளிப்படுத்த வாய்ப்பு இல்லாமல் போனது இந்தியாவின் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

//தங்கள் கருத்துக்கள் அனைத்தையும் ஆமோதிக்கிறேன் //

நன்றி ஜாபர்

Naresh Kumar said...

யோசிக்க வேண்டிய கருத்து!!!

கண்டிப்பாக தேர்தலே முக்கியம். ஆனால், எப்பாடு கொண்டாவது கிரிக்கெட் நடத்தியே தீர வேண்டும் என்ற ஐபிஎல் போட்டி நடத்தினால், அப்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது இந்தியாவிற்கே கெட்ட பெயர்!!!

ஆனால், இதையெல்லாம் ஏற்குமா என்று தெரியவில்லை, தன்னிச்சையாக செயல்படும் கிரிக்கெட் நிறுவனம்!!!

Maximum India said...

// கருத்துரைக்கு நன்றி நரேஷ் //

//கண்டிப்பாக தேர்தலே முக்கியம். ஆனால், எப்பாடு கொண்டாவது கிரிக்கெட் நடத்தியே தீர வேண்டும் என்ற ஐபிஎல் போட்டி நடத்தினால், அப்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது இந்தியாவிற்கே கெட்ட பெயர்!!!//

உண்மைதான். அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லையென்றாலும், இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய மிகப் பெரிய சுமை நமது பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஏற்படும். இது தேவையற்ற ஒன்று என்றே நினைக்கிறேன். ஐபிஎல் போட்டிகள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்ற நிலையில் அவற்றுக்கு அரசு எந்த முக்கியத்துவமும் கொடுக்க வேண்டியதில்லை.

//ஆனால், இதையெல்லாம் ஏற்குமா என்று தெரியவில்லை, தன்னிச்சையாக செயல்படும் கிரிக்கெட் நிறுவனம்!!!//

சர்வதேச கோட்பாட்டின் படி, அரசாங்கங்கள் தன் நாட்டில் உள்ள விளையாட்டு அமைப்புகளின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது. அதே சமயம் பல விளையாட்டு அமைப்புகள் நிர்வாக செலவுக்கு அரசையே நம்பி இருப்பதால், அவற்றின் மீது அரசினால் ஒரு வித மறைமுக ஆதிக்கத்தை செலுத்த முடிகிறது. நமது கிரிக்கெட் வாரிய விஷயத்தில் பணம் ஒரு பிரச்சினை இல்லை என்பதால், அவர்கள் தனிக்காட்டு ராஜாங்கம் நடத்துகிறார்கள்.

அதே சமயம், அவர்கள் அனுபவிப்பது மக்களின் பணமே என்பதால், மக்களிடம் (நாட்டிடம்) ஒரு பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டியது அவர்களின் கடமை. நாட்டை விட அதிலுள்ள அமைப்புகள் பெரியதல்ல. கிரிக்கெட் வையம் தனது சமூக/தேச பொறுப்புகளை சரி வர நிறைவேற்றுவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு.

நன்றி.

வால்பையன் said...

கிரிக்கெட், தேர்தல் ரெண்டுமே நல்ல பொழுதுபோக்கா தான் இருக்கு!

கிரிக்கெட்டில் காசு செலவாகும்
தேர்தலில் அதுவே வருமானம்!

ஆக தேர்தலுக்கு முன்னுரிமை அளிப்போம்

Maximum India said...

பின்னூட்டத்திற்கு நன்றி வால்பையன்

//கிரிக்கெட்டில் காசு செலவாகும்
தேர்தலில் அதுவே வருமானம்!

ஆக தேர்தலுக்கு முன்னுரிமை அளிப்போம்//

இது கூட நல்லாத்தான் இருக்கு :)

Unknown said...

கிரிக்கட் என்பது விளையாட்டல்ல.விளையாட்டை வணிகமயமாக்கும் தொழில்.எந்த அரசும் தொழில்துறை சுமுகமாக நடக்க தான் முன்னுரிமை கொடுக்கவேண்டும்.அப்படி பாதுகாப்பு தர தவறினால் அந்த தேசத்தில் தொழில் நடப்பது சாத்தியமில்லை.

அரசால் பாதுகபபு தர இயலாத சூழலில் ஐபிஎல் போட்டிகள் வேறு ஒரு நாட்டுக்கு மாற்றப்படுவது தான் நியாயமானது என்று தோன்றுகிறது.ஐசிசி இங்கிலாந்தை விட்டுவிட்டு வளைகுடாவுக்கு ஜாகையை மாற்றியதுபோல்...

ஐபிஎல்லை ஆஸ்திரேலியாவுக்கு மாற்றுவதுதான் அதன் எதிர்காலத்துக்கு நல்லது.

Maximum India said...

அன்புள்ள செல்வன்

கருத்துரைக்கு நன்றி.

//ஐபிஎல்லை ஆஸ்திரேலியாவுக்கு மாற்றுவதுதான் அதன் எதிர்காலத்துக்கு நல்லது.//

நல்ல யோசனைதான். ஆனால், அது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானத்தை குறைத்து விடுமே? :)

நன்றி.

Unknown said...

தொழிலில் நஷ்டம் ஏற்படுவதை விட வருமானம் குறைந்தால் பிரச்சனையில்லை அல்லவா?

டிவி உரிமைகள் தான் கிரிக்கட் போர்டுக்கு பெரியவருமானம்.அது குறையபோவதில்லை.கேட் கலெக்ஷன் வருமானம் குறையும்.ஆனால் போட்டியை நடத்தாமல் இருந்தாலும் தான் கேட் கலெக்ஷன்கள் இருக்காது.

ஐபிஎல்லை தள்ளி வைப்பது அதை இந்த வருடம் நடத்தாமல் இருப்பதற்கு சமம்.Itenary clashes

Maximum India said...

அன்புள்ள செல்வன்

மீள்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

//தொழிலில் நஷ்டம் ஏற்படுவதை விட வருமானம் குறைந்தால் பிரச்சனையில்லை அல்லவா?

டிவி உரிமைகள் தான் கிரிக்கட் போர்டுக்கு பெரியவருமானம்.அது குறையபோவதில்லை.கேட் கலெக்ஷன் வருமானம் குறையும்.ஆனால் போட்டியை நடத்தாமல் இருந்தாலும் தான் கேட் கலெக்ஷன்கள் இருக்காது.

ஐபிஎல்லை தள்ளி வைப்பது அதை இந்த வருடம் நடத்தாமல் இருப்பதற்கு சமம்.Itenary ச்லஷேஸ்//

இந்திய கிரிக்கெட் போட்டிகள் (IPL) என்று பெயர் வைத்துக் கொண்டால் சென்னை மும்பை அணிகளுக்கிடையே ஆஸ்திரேலியாவில் போட்டிகளை நடத்தினால் டிவி வருமானம் கூட அதிகம் இருக்காதே? உள்ளூரில் நடத்தினால்தானே, மக்களிடையே உணர்வுகளை தூண்டி விட்டு அதிக TRP பெற முடியும்? மேலும் அங்கே இவ்வளவு போட்டிகளுக்கும் பாதுகாப்பு தர அந்த ஊர் போலீஸ் முன் வர வேண்டுமே?

நன்றி.

Unknown said...

Maximum India,

நம் ரசிகர்கள் தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா டெஸ்ட் மேட்சையே விடிய, விடிய பார்க்கிறவர்கள். சச்சினும்,தோனியும்,பஜ்ஜியும் எங்கே ஆடினாலும் பார்ப்பார்கள்.

ஆஸ்திரேலியா,நியூசியில் போட்டி நடத்த பாதுகாப்பு வேண்டியதில்லை.

KARTHIK said...

// மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு பாதுகாப்பு படைகளை இலவசமாக அனுப்பி வைக்கக் கூடாது.//

ஆமாம்.

அதுக்காக போட்டியையும் நடத்தாமா இருக்கக்கூடாது.
வாருமானத்த பாக்குர போட்டி அமைப்பே பாதுகாப்பபையும் பாத்துக்கவேண்டியதுதான்.

Maximum India said...

அன்புள்ள செல்வன்

மீள்வருகைக்கு நன்றி.

//நம் ரசிகர்கள் தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா டெஸ்ட் மேட்சையே விடிய, விடிய பார்க்கிறவர்கள். சச்சினும்,தோனியும்,பஜ்ஜியும் எங்கே ஆடினாலும் பார்ப்பார்கள்.//

இதெல்லாம் கொஞ்சம் பழைய காலம் என்றே தோன்றுகிறது. கிரிக்கெட்டையும் நாட்டுப் பற்றையும் சேர்த்து வைத்து பார்த்து மக்கள் குழம்பிக் கொண்டு இருந்த காலம் அது. இப்போதெல்லாம் மக்கள் கொஞ்சம் விவரமாகி விட்டனர். சமீபத்திய ஒரு நாள் போட்டிகளின் TRP மிகவும் குறைந்து போய் உள்ளது. ஐந்து நாள் போட்டிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். மக்களிடம் கிரிக்கெட் மோகத்தை தொடர்ந்து தக்க வைக்கவே இருபது-இருபது போட்டிகள் உருவாக்கப் பட்டன. துவக்கத்தில் இந்தப் போட்டிகளை ஏற்றுக் கொள்ள மறுத்த இந்திய கிரிக்கெட் வாரியம்தான் (ஐசிஎல் வணிகரீதியாக வெற்றி பெற்றதை தொடர்ந்து) இந்தியாவில் பெரிய அளவில் நடத்திக் காட்டியது. இந்த போட்டிகளுக்குக் கூட மக்களை வரவழைக்க கவர்ச்சி ஆட்டங்கள் தேவைப் பட்டது. உள்ளூர் அணிகளை முன்னிறுத்தி பிரதேச உணர்வுகள் தூண்டப் பட்டன. நடிகர்களை முன்னிறுத்தி பெருமளவு விளம்பரங்கள் செய்யப் பட்டன. இவற்றையெல்லாம் நாம் மறந்து விட முடியாது. வெளிநாடுகளில் இந்த போட்டிகளை நடத்துவது உள்ளூர் அணிகளை முன்னிறுத்தியும் பிரதேச உணர்வுகளைத் தூண்டியும் முன் போல் மார்கெட்டிங் செய்வதை கடினமாக்கும்.

//ஆஸ்திரேலியா,நியூசியில் போட்டி நடத்த பாதுகாப்பு வேண்டியதில்லை.//

பாதுகாப்பு முற்றிலும் தேவை இல்லை என்று சொல்ல முடியாது. குறைவாக தேவைப் படும் என்று வேண்டுமானால் சொல்லலாம். மேலும், இந்த வசதிகளை இலவசமாக செய்து தர அந்தந்த நாட்டின் கிரிக்கெட் வாரியங்கள் (ஏற்கனவே ஏகப் பட்ட பகை) முன்வருமா என்பது சந்தேகமான ஒன்று. அவர்களுடன் வருமானத்தைப் பகிர்ந்து கொள்ள நம்மூர் ஐபிஎல் முதலாளிகள் முன்வருவார்களா என்பதும் கேள்விக்குறியான ஒன்றுதான்.

நன்றி.

Maximum India said...

நன்றி கார்த்திக்

//அதுக்காக போட்டியையும் நடத்தாமா இருக்கக்கூடாது.//

இது பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விடாமல் நடத்திய ஒன்றாகும்.

//வாருமானத்த பாக்குர போட்டி அமைப்பே பாதுகாப்பபையும் பாத்துக்கவேண்டியதுதான்.//

கண்டிப்பாக. இது நல்ல யோசனை. நாட்டின் வரிப் பணத்தில் தனியார் நலனுக்காக நடத்தப் படும் போட்டிகளுக்கு பெரிய அளவில் பாதுகாப்பு வழங்குவது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் என்றே நினைக்கிறேன்.

நன்றி.

Unknown said...

உங்கள் கேள்விகளுக்கு ஐபிஎல் பதில் சொல்லிவிட்டது...ஆம்.ஐபிஎல் இந்தியாவை விட்டு செல்கிறது.

நமக்கு அரசியல் மட்டும் இருந்தால் போதும்.தொழிற்சாலைகளும்,வேலைவாய்ப்புக்களும் எதற்கு?

http://content.cricinfo.com/ipl2009/content/current/story/396319.html

IPL to be played outside India

"I apologise to the people of India for moving the tournament out. But we are going ahead with the event so that they can at least watch it on television." © AFP

England and South Africa have emerged as the front-runners to host the second season of the Indian Premier League (IPL) after the BCCI decided, following days of inconclusive negotiations with the Indian home ministry and various state governments, to shift the tournament out of India. The venue and new schedule will be announced on Monday.

Maximum India said...

அன்புள்ள செல்வன்

//உங்கள் கேள்விகளுக்கு ஐபிஎல் பதில் சொல்லிவிட்டது...ஆம்.ஐபிஎல் இந்தியாவை விட்டு செல்கிறது.//

ஆம். ஐபிஎல் எனது கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டது. பாவம், நாட்டை விட நோட்டுதான் முக்கியம் என்று நினைக்கின்ற தொழில் அதிபர்களின் பிடியில் இருக்கும் ஐபிஎல்லால் வேறு என்ன பதில் சொல்ல முடியும்? இப்போது அவர்களுக்கு தக்க பதில் கொடுக்க வேண்டியது நம் மக்களின் கடமை என்று நினைக்கிறேன்.

//நமக்கு அரசியல் மட்டும் இருந்தால் போதும்.தொழிற்சாலைகளும்,வேலைவாய்ப்புக்களும் எதற்கு?//

கேள்வியே தவறு என்று நினைக்கிறேன். ஐபிஎல் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உதவும் தொழிற்சாலை அமைப்பு அல்ல. நாட்டுப் பற்று மற்றும் கிரிக்கெட் ஆர்வத்தின் பெயரால் மக்களின் நேரத்தையும் பணத்தையும் சுரண்டி முழுக்க முழுக்க காசாக்க நினைக்கும் ஒரு வர்த்தக அமைப்பு மட்டும்தான்.

இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டிற்கு அரசியல் மிக முக்கியமானதாகவே இருக்க வேண்டும். நம்மைப் போன்ற சாதாரண மக்கள் அரசியலைப் பற்றி நினைப்பதை/பேசுவதை நிறுத்தி விட்டால், பாகிஸ்தான் போல நம் நாட்டிலும் சர்வாதிகார ஆட்சி தோன்றி விடும். ஜனநாயக ரீதியான ஆட்சி முறைதான் நிதானமான ஆனால் நிரந்தரமான வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை வேறு பல பதிவுகளில் விளக்கி இருக்கிறேன்.

நன்றி.

கப்பலோட்டி said...

மக்களுக்கு பயன் தராத பணத்தை சம்பாதிக்க ஆசை படும் கிரிக்கெட் போட்டி நடந்தால் என்ன ?நடக்க விட்டால் என்ன?

Unknown said...

நண்பர் மேக்சிமம் இந்தியா,

தொழிலையும், தேசபக்தியையும் போட்டு குழப்பிகொள்ள கூடாது.தொழிலையே நடத்தமுடியாத சூழலை உருவாக்கி வைத்திருக்கும் தேசத்தில் தொழிலதிபர்கள் நஷ்டப்பட்டு தம் தேசபக்தியை நிருபிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு.

//ஐபிஎல் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உதவும் தொழிற்சாலை அமைப்பு அல்ல. நாட்டுப் பற்று மற்றும் கிரிக்கெட் ஆர்வத்தின் பெயரால் மக்களின் நேரத்தையும் பணத்தையும் சுரண்டி முழுக்க முழுக்க காசாக்க நினைக்கும் ஒரு வர்த்தக அமைப்பு மட்டும்தான்.//

நம் நாட்டில் பணம் சேர்ப்பதே பெரும் குற்றம் என்ற மனோபாவமும், தொழிலதிபர்கள் பாவிகள்,கொள்ளைகாரர்கள் என்ற நினைப்பும் பொதுமக்களிடையே காணப்படுகிறது. அதனால் பணம் சேர்ப்பதை குற்றமாக கருதாமல், தொழிலதிபர்களை ஹீரோவாக கருதும் மேலைதேயங்களுக்கு தொழில்களும், தொழிலதிபர்களும் குடிபெயர்வது யதார்த்தமே.

இந்தியாவுக்கு இத்தகைய கொள்ளைகார தொழிலதிபர்களும்,தொழில்களும் தேவையில்லை. நமது மக்களுக்கு நீங்கள் சொன்னதுபோல் 'நாட்டுக்கு மிக முக்கியமான அரசியலே' போதும்.தொழிலதிபர்கள் ஐரோப்பிய/அமெரிக்க தேசங்களுக்கு குடிபெயர்வதே நல்லது.இந்த நிலை தொடர்ந்தால் வரும்காலத்தில் அதுதான் நடக்கும்.

Brain drain will be our future

Maximum India said...

அன்புள்ள கப்பலோட்டி

//மக்களுக்கு பயன் தராத பணத்தை சம்பாதிக்க ஆசை படும் கிரிக்கெட் போட்டி நடந்தால் என்ன ?நடக்க விட்டால் என்ன?//

உண்மைதான். விளையாட்டை விளையாட்டாக மட்டும் பார்க்காமல் "மதமாக" மக்கள் பார்ப்பதால்தான் இவ்வளவு பிரச்சினையும்.

நன்றி.

Maximum India said...

அன்புள்ள செல்வன்

//தொழிலையும், தேசபக்தியையும் போட்டு குழப்பிகொள்ள கூடாது//

தொழில் என்பது ஒருவருடைய வாழ்வாதாரத்திற்காக. அதே சமயம், அந்த வாழ்வையே தந்த நாட்டிற்கு அனைவரும் பட்டிருக்கும் நன்றிக் கடன்தான் தேச பக்தி என்பது. அது ஒருவரின் உயிருடன் ஒன்றாக கலந்திருக்க வேண்டியது. யாரும் சொல்லித் தந்து வர வேண்டியதில்லை. தொழில், தேசபக்தி இரண்டும் வேறு வேறு என்றாலும், தேச பக்தி இல்லாதவர் ஒரு நாட்டில் தங்கி இருக்கவே தகுதி இல்லாதவர் என்ற பட்சத்தில், அந்த நாட்டில் தொழில் நடத்த அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?

//தொழிலையே நடத்தமுடியாத சூழலை உருவாக்கி வைத்திருக்கும் தேசத்தில் தொழிலதிபர்கள் நஷ்டப்பட்டு தம் தேசபக்தியை நிருபிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு.//

நிதித் துறையில் பத்து வருடங்கள் அனுபவம் பெற்றவன் நான். பல தொழிலதிபர்கள் (அம்பானி உட்பட) கலந்து கொண்ட கருத்தரங்குகளில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். இந்தியா போன்ற குழப்பம் மிகுந்த நாடுகளில்தான் அதிகம் சம்பாதிக்க முடியும் என்று அவர்களில் பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். எனவேதான் , இந்தியாவின் (இதர முன்னேறிய நாடுகளின்) தொழில் அதிபர்கள் மேலை நாடுகளை விட அதிகமாகவே லாப விகிதம் (margin) பார்க்கிறார்கள். இதனால்தான், இந்திய சென்செக்ஸ் பி/ ஈ டொவ் ஜோன்சை விட எப்போதுமே அதிகமாகவே உள்ளது. (இதை நீங்கள், இந்திய தொழிற் நிறுவனங்களின் ஆண்டறிக்கையைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.)

லாப விகிதம் அளவோடு இருந்தால் அது வியாபாரம், அளவுக்கு மீறி இருந்தால் அது பகல் கொள்ளைதானே?

//நம் நாட்டில் பணம் சேர்ப்பதே பெரும் குற்றம் என்ற மனோபாவமும், தொழிலதிபர்கள் பாவிகள்,கொள்ளைகாரர்கள் என்ற நினைப்பும் பொதுமக்களிடையே காணப்படுகிறது. அதனால் பணம் சேர்ப்பதை குற்றமாக கருதாமல், .//

அனைவரையும் பொது படுத்த முடியாது. டாடா குழுமம் போன்ற சிறந்த வணிக நடைமுறைகள் (Corporate Governance) பின் பற்றும் தொழில் நிறுவனங்களும் இருக்கின்றன. சத்யம் போல முதலீட்டாளர்களின் பணத்தை சுருட்டும் நிறுவனங்களும் உள்ளன.

அதே சமயம், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சில தொழில் அதிபர்கள் அடித்து பகல் கொள்ளைதானே? ஹிந்துஸ்தான் ஜிங் விஷயத்தில் சில தொழில் அதிபர்கள் அடித்து பகற் கொள்ளைதானே? இன்னும் எத்தனை ஆதாரம் வேண்டும் உங்களுக்கு?

ரத்தன் டாடா ஒரு முறை ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கு அரசிடம் அதிக பணம் தர முன் வந்த போது, போட்டி நிறுவனத்தின் தலைவர் வெளிப்படையாக சொன்னது இது. " அவரிடம் அதிக பணம் இருந்தால் நன்கொடை கொடுக்கட்டும், எங்கள் லாபத்தில் கை வைக்க வேண்டாம்"

ஏற்கனவே சொன்னபடி, இந்தியா போன்ற பின் தங்கிய நாடுகளுக்கே மேலை நாடுகளின் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவது எதற்காக? இங்கேதான் அதிகம் சுரண்ட முடியும் என்பதனால்தான்.

//இந்தியாவுக்கு இத்தகைய கொள்ளைகார தொழிலதிபர்களும்,தொழில்களும் தேவையில்லை. நமது மக்களுக்கு நீங்கள் சொன்னதுபோல் 'நாட்டுக்கு மிக முக்கியமான அரசியலே' போதும்.தொழிலதிபர்கள் ஐரோப்பிய/அமெரிக்க தேசங்களுக்கு குடிபெயர்வதே நல்லது.இந்த நிலை தொடர்ந்தால் வரும்காலத்தில் அதுதான் நடக்கும்.

Brain drain will be our புடுரே//

நீங்கள் சொல்வதெல்லாம் மிகவும் பழைய காலம். கடந்த பதினைந்து/இருபது ஆண்டுகளில் இந்தியா மிகவும் மாறி விட்டது. இந்தியாவின் கொள்கைகள் தொழில் அதிபர்களுக்கு மிகவும் சாதகமாக மாறி உள்ளன. இதனால்தான் போட்டி போட்டுக் கொண்டு வெளி நாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருகின்றன.

//தொழிலதிபர்களை ஹீரோவாக கருதும் மேலைதேயங்களுக்கு தொழில்களும், தொழிலதிபர்களும் குடிபெயர்வது யதார்த்தமே//

இது கூட பழைய வாதமே. நாட்டை பின்னடைவுக்கு தள்ளியது நிதி நிறுவனங்களே என்று பகிரங்கமாக அமெரிக்க நாடாளுமன்றம் குற்றம் சாட்டியதும், அரசுப் பணத்தை வாங்க தனி விமானத்தில் வந்ததற்காக உதவி தொகையை தர மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. இப்போது கூட AIG விவகாரத்தில் ஒபாமா மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் (தொண்ணூறு சதவீத வரி) கவனிக்கத் தக்கவை.

தொடர்ந்த விவாதத்திற்கு மிக்க நன்றி.

Unknown said...

நஃண்பரே,

//தொழில் என்பது ஒருவருடைய வாழ்வாதாரத்திற்காக. அதே சமயம், அந்த வாழ்வையே தந்த நாட்டிற்கு அனைவரும் பட்டிருக்கும் நன்றிக் கடன்தான் தேச பக்தி என்பது. அது ஒருவரின் உயிருடன் ஒன்றாக கலந்திருக்க வேண்டியது. யாரும் சொல்லித் தந்து வர வேண்டியதில்லை. தொழில், தேசபக்தி இரண்டும் வேறு வேறு என்றாலும், தேச பக்தி இல்லாதவர் ஒரு நாட்டில் தங்கி இருக்கவே தகுதி இல்லாதவர் என்ற பட்சத்தில், அந்த நாட்டில் தொழில் நடத்த அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?//


ஐ.பி.எல்லை நடத்துபவர்களுக்கு தேசபக்தி இல்லை என்று எப்படி சொல்ல முடியும்?இந்தியாவில் தொழிலை நடத்த தான் அனுமதி கேட்டனர்.அது மறுக்கப்பட்டதும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.இதில் என்ன தவறு இருக்கிறது?வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு,அல்லது கம்பனி துவக்குகிறவர்களுக்கு தேசபக்தி இல்லை என்று கூற முடியுமா?இந்தியாவில் போட்டிகளை நடத்த முடியாதென்றால் எங்குமே நடத்தாமல் நஷ்டப்படுவதுதான் தேசபக்தியா?

//நிதித் துறையில் பத்து வருடங்கள் அனுபவம் பெற்றவன் நான். பல தொழிலதிபர்கள் (அம்பானி உட்பட) கலந்து கொண்ட கருத்தரங்குகளில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். இந்தியா போன்ற குழப்பம் மிகுந்த நாடுகளில்தான் அதிகம் சம்பாதிக்க முடியும் என்று அவர்களில் பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். எனவேதான் , இந்தியாவின் (இதர முன்னேறிய நாடுகளின்) தொழில் அதிபர்கள் மேலை நாடுகளை விட அதிகமாகவே லாப விகிதம் (மர்கின்) பார்க்கிறார்கள். இதனால்தான், இந்திய சென்செக்ஸ் பி/ ஈ டொவ் ஜோன்சை விட எப்போதுமே அதிகமாகவே உள்ளது. (இதை நீங்கள், இந்திய தொழிற் நிறுவனங்களின் ஆண்டறிக்கையைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.)


லாப விகிதம் அளவோடு இருந்தால் அது வியாபாரம், அளவுக்கு மீறி இருந்தால் அது பகல் கொள்ளைதானே? //

இந்தியா வளரும் நாடு என்பதால் இங்கு நன்கு சம்பாதிக்க முடியும் என்பது உண்மையே.ஆனால் வளரும் நாடுகளுக்கு உரித்தான பல பிரச்சனைகளை நாம் தீர்க்கவில்லை(உதாரணம்: தீவிரவாதத்தால் தொழில்கள் பாதிக்கப்படுவது, அரசியலுக்கு முதலிடம் தந்து தொழில்துறையை புறக்கணிப்பது).இது மிகப்பெரும் பின்னடைவே.

நேர்மையான முறையில் லாபம் எத்தனை சம்பாதித்தாலும் அது கொள்ளை இல்லை.

//
ஏற்கனவே சொன்னபடி, இந்தியா போன்ற பின் தங்கிய நாடுகளுக்கே மேலை நாடுகளின் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவது எதற்காக? இங்கேதான் அதிகம் சுரண்ட முடியும் என்பதனால்தான்.//

சீனாவுக்கு வருவதுபோல் இந்தியாவுக்கு அதிக அன்னிய முதலீடு வருவதில்லை.ஏன்?நம் அரசியல் நிலைமையும், அடிப்படை கட்டமைப்பு அற்ற தன்மையும்தான்.நாம் விழிப்போடு இல்லாவிட்டால் இந்த நிறுவனங்கள் எல்லாம் இனி பிரேசில், இராக் என வேறுநாடுகளை தேடி ஓடும் சூழல் வரலாம்.

//நீங்கள் சொல்வதெல்லாம் மிகவும் பழைய காலம். கடந்த பதினைந்து/இருபது ஆண்டுகளில் இந்தியா மிகவும் மாறி விட்டது. இந்தியாவின் கொள்கைகள் தொழில் அதிபர்களுக்கு மிகவும் சாதகமாக மாறி உள்ளன. இதனால்தான் போட்டி போட்டுக் கொண்டு வெளி நாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருகின்றன.//

சீனாவுக்கு வரும் அளவுக்கு நம் நாட்டுக்கு வருவது இல்லை.நமது சக்தியை நாம் முழுக்க பயன்படுத்திகொள்வதில்லை.

//இது கூட பழைய வாதமே. நாட்டை பின்னடைவுக்கு தள்ளியது நிதி நிறுவனங்களே என்று பகிரங்கமாக அமெரிக்க நாடாளுமன்றம் குற்றம் சாட்டியதும், அரசுப் பணத்தை வாங்க தனி விமானத்தில் வந்ததற்காக உதவி தொகையை தர மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. இப்போது கூட ஆஈG விவகாரத்தில் ஒபாமா மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் (தொண்ணூறு சதவீத வரி) கவனிக்கத் தக்கவை.//

அமெரிக்காவில் தொழிலதிபர்கள் இன்றும்,என்றும் ஹீரோக்கள்தான்.வால்ஸ்ட்ரீட் நிதிநிறுவனங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டு மக்கள் காசில் மில்லியன்கணக்கில் போனஸ்களை எடுத்து வழங்கியதால் தான் அவர்களை மக்கள் வெறுக்கிறார்கள்.அனைத்து தொழிலதிபர்களையும் வெறுக்கவில்லை.

Maximum India said...

அன்புள்ள செல்வன்

//ஐ.பி.எல்லை நடத்துபவர்களுக்கு தேசபக்தி இல்லை என்று எப்படி சொல்ல முடியும்?இந்தியாவில் தொழிலை நடத்த தான் அனுமதி கேட்டனர்.அது மறுக்கப்பட்டதும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.இதில் என்ன தவறு இருக்கிறது?வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு,அல்லது கம்பனி துவக்குகிறவர்களுக்கு தேசபக்தி இல்லை என்று கூற முடியுமா?இந்தியாவில் போட்டிகளை நடத்த முடியாதென்றால் எங்குமே நடத்தாமல் நஷ்டப்படுவதுதான் தேசபக்தியா?//

தேசப் பற்று இருந்திருந்தால், இந்தியாவின் பெயரை உலகளவில் நாறடிக்காமல், அரசு கேட்டுக் கொண்ட படி மே 16 ஆம் தேதிக்கு பின் நடத்தி இருப்பார்கள்.

மீண்டும் மீண்டும் ஐபிஎல்லை தொழில் என்று சொல்கிறீர்கள். ஐபிஎல் என்பது ஒரு தொழில் நிறுவனம் அல்ல.

அனைவருக்கும் சொந்தமான கிரிக்கெட் விளையாட்டை ஒரு சிலர் மட்டும் தமது சொந்த லாபத்திற்கு பயன் படுத்தும் வர்த்தகமே ஐபிஎல் ஆகும். யார் வேண்டுமானாலும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தலாம் என்ற நிலை இருந்தால் இதனை ஒரு தொழில் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்திய நாட்டின் சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த பல ஆண்டுகளுக்கு முன் பெற்ற அனுமதியை தவறாக பயன்படுத்தி உருவாக்கப் பட்டதே ஐபிஎல். இதனுடன் போட்டிக்கு வந்த ஐசிஎல் அமைப்பை ஓரம் கட்ட தனது அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தியது எந்த வணிக நெறிமுறையிலும் அடங்காது.

ஓரளவாவது ஐபிஎல் நேர்மையான தொழில் ஆக கருதப் பட வேண்டுமென்றால், க்ளப்கள் நியாயமான முறையில் ஏலம் விடப் பட்டிருக்க வேண்டும். பிசிசியியில் பல நாட்கள் தொடர்ந்து குப்பை கொட்டி கொண்டிருக்கும் ஒரு சிலருக்கே (நடிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சில தொழில் அதிபர்கள்) அந்த க்ளப்கள் கிடைத்திருக்கக் கூடாது. இந்தியா என்ற பெயரைச் சொல்லியே நாட்டைக் கொள்ளையடிக்கும் வியாபாரங்களில் இதுவும் ஒன்றுதானே தவிர நேர்மையான தொழில் நெறிகளை கொண்ட ஒரு முயற்சி அல்ல.

//இந்தியா வளரும் நாடு என்பதால் இங்கு நன்கு சம்பாதிக்க முடியும் என்பது உண்மையே.//

இப்போது ஒப்பு கொள்கிறீர்களா? வளரும் நாடு என்பதால் மட்டுமல்ல. இங்கு சட்டத்தில் ஏராளமான ஓட்டைகள் உண்டு. அதனை சரி வர புரிந்து கொண்டு, நீதி நேர்மை பார்க்காமல் இந்தியாவில் வியாபாரம் செய்தால் அள்ளலாம் போங்கள். என்னிடம் தனிப் பட்ட முறையில் ஒரு முன்னணி பரஸ்பர நிதி தலைவர் வேடிக்கையாக கூறினார். "இந்தியாவில் எந்த கம்பெனியில் வேண்டுமானாலும் முதலீடு செய்யுங்கள். டாடா குழுமத்தில் மட்டும் வேண்டாம். காரணம் அவர்கள் மட்டுமே "பிழைக்கத்" தெரியாதவர்கள். மற்றவர்கள் அனைவரும் இந்தியாவைப் பற்றி நன்கு புரிந்தவர்கள். எப்படியும் முன்னேறத் துடிப்பவர்கள்"

//ஆனால் வளரும் நாடுகளுக்கு உரித்தான பல பிரச்சனைகளை நாம் தீர்க்கவில்லை(உதாரணம்: தீவிரவாதத்தால் தொழில்கள் பாதிக்கப்படுவது, அரசியலுக்கு முதலிடம் தந்து தொழில்துறையை புறக்கணிப்பது).இது மிகப்பெரும் பின்னடைவே.//

யார் சொன்னார்கள் அரசியலுக்கு முதலிடம் என்று? தொழில் அதிபர்கள் கடந்த சில ஆண்டுகளில் சம்பாத்தித்ததை அரசியல்வாதிகள் பல தலைமுறைக்கும் சேர்த்துக் கூட சம்பாதித்திருக்க மாட்டார்கள்.

//நேர்மையான முறையில் லாபம் எத்தனை சம்பாதித்தாலும் அது கொள்ளை இல்லை.//

ரிலையன்ஸ் பவர் பங்கு வெளியீடு சிறந்த தொழில் அணுகுமுறையா? அதில் பேசிய அனில் அம்பானி பங்கு துவக்கத்திலேயே நான்கு இலக்க மதிப்பில் வியாபாரம் ஆகும் என்றார். விதிமுறைகளுக்கு எதிரான இந்த பேச்சு இது தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப் பட்டது. அந்த பங்கு சமீபத்தில் சென்றது இரண்டு இலக்கத்தில். இதுதான் நேர்மையான முறையிலான லாபமா?

பாரதி தொலைத்தொடர்பு நிறுவனம் வேறெந்த நாட்டிலாவது இவ்வளவு குறைந்த விலைக்கு (நாட்டின் பொதுசொத்தான) ரேடியோ அலைவரிசையை வாங்க முடியுமா? வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் எந்த மேலை நாட்டிலாவது கலப்படம் மிகுந்த குளிர் பானங்களை விற்க முடியுமா?

அண்ணன்தம்பி அம்பானிகள் எந்த மேலை நாட்டிலாவது பொது சொத்துக்கு அடித்துக் கொண்டு நீதி மன்றம் ஏற முடியுமா?

அரசு நிறுவனங்களை முழுக்க முழுக்க ஏப்பம் விட்டுக் கொண்டு, சிலர் உலக பணக்காரர்களின் வரிசையில் இடம் பெற முடியுமா?

//சீனாவுக்கு வருவதுபோல் இந்தியாவுக்கு அதிக அன்னிய முதலீடு வருவதில்லை.ஏன்?//

சீனா இந்தியாவை விட பல மடங்கு முன்னேறி இருந்தாலும் இந்தியாவைப் போல அங்கு பெரும் பணக்காரர்கள் உருவாகுவதில்லையே? ஏன்? சுரண்டுவதில் நம் நாட்டு தொழில் அதிபர்களுடன் எந்த வெளிநாடும் போட்டி போட முடியாது. அதனால்தான் அவர்கள் வந்தாலும் உள்ளூர் அதிபர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டே வருகின்றனர். சொல்லப் போனால், டாட்டா போன்றவர்கள் இவர்களுடன் போட்டி போட முடியாமல் வெளி நாடுகளுக்கு செல்ல ஆசை படுகின்றனர். இது அவரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக சொன்னது.

//அமெரிக்காவில் தொழிலதிபர்கள் இன்றும்,என்றும் ஹீரோக்கள்தான்.வால்ஸ்ட்ரீட் நிதிநிறுவனங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டு மக்கள் காசில் மில்லியன்கணக்கில் போனஸ்களை எடுத்து வழங்கியதால் தான் அவர்களை மக்கள் வெறுக்கிறார்கள்.அனைத்து தொழிலதிபர்களையும் வெறுக்கவில்லை. //

அமெரிக்க நாடாளுமன்றம் குற்றம் சாட்டியது நிதி நிறுவனங்களை மட்டுமல்ல. தனி விமானத்தில் வந்து மக்கள் வரிப் பணத்தை கொடையாக கேட்ட வாகனத்துறை தலைவர்களையும்தான். ஒபாமா ஒட்டு வாங்கியது கூட தொழில் (அமெரிக்காவில் நிதிதான் பெரிய தொழில்) தலைவர்களுக்கு மக்கள் பணத்தை தாரை வழங்க முடியாது என்று சொல்லித்தான். இப்போது கூட, வரி பணத்தில் தொழில் தலைவர்கள் பெரிய அளவில் சம்பளம் போனஸ் எல்லாம் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று அந்நாட்டு பாராளுமன்றம் வலியுறுத்தியுள்ளது.

நம்மூர் விக்ரம் பண்டிட் (அதாங்க சிடிபங் தலைவர்) ஒரு டாலருக்கு வேலை செய்ய முன் வந்த போது, இது வரை நடந்த தவறுகளுக்கு ஒரு டாலர் சம்பளம் பரிகாரமாக முடியாது என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் மூக்கறுத்தனர். ஒரு ஒரு வருத்தம், அங்குள்ளது போல இந்திய தொழில் அதிபர்களை மூக்கறுக்க இந்தியாவில் நல்ல/வல்ல அரசியல்வாதிகள் இல்லை. இதையே நம்மூர் தொழில் அதிபர்கள் சாதகமாக்கிக் கொண்டு இந்தியாவில் இன்று கோலோச்சுகிறார்கள்.

நன்றி.

Blog Widget by LinkWithin