Sunday, October 12, 2008

இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு - ஒரு இந்தியப் பார்வை



இந்தியா, உலக பழம் பெருமை வாய்ந்த நாகரிகங்களின் தொட்டிலாக கருதப் படும் ஒரு நாடு. தன்னை அழிக்க வந்த , கிரேக்கர், மங்கோலியர், துருக்கியர் போன்ற அந்நியர்களைக் கூட அரவணைத்துக் கொண்டு, தன்னுடைய உயரிய பண்பாட்டினால், தன்னுள்ளே ஐக்கியப் படுத்திக் கொண்ட நாடு இது.







பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்குப் பெயர் பெற்ற இந்த நாட்டின் நீண்ட நெடிய வரலாற்றில், இதன் சீரிய பெருந்தன்மைக்கு நவீன காலத்திய உதாரணங்கள் சில இங்கே.




இந்திய-பாகிஸ்தான் தேசப் பிரிவினையின் போது, பாகிஸ்தானுடன் சேர கிழக்கு வங்க மக்கள் (அரசியல்வாதிகள்) முடிவு எடுத்திருந்தப் போதும், அந்நாட்டு மக்கள் அபயக் குரல் எழுப்பியவுடன், நேசக் கரம் நீட்டி, அவர்களுக்கு பங்களாதேஷ் தந்த நாடு இது.




ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலரால் இந்நாட்டு பிரதமர் கொல்லப் பட்ட போது, உடனடியாக சற்று கோபப் பட்டாலும், பின்னர் அமைதியாகி, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையே (அதுவும் அதே கட்சியின் மூலமாகவே) அதே உயர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்து இந்த நாடு.




ஒரு மாநில மக்கள், தனி நாடு கோரிய போதும், அவர்கள் அண்டை நாட்டில் உள்ள தமது உறவினரைக் காண, சாலை அமைத்து தந்தது இந்த நாடு. மேலும் நமது அண்டை நாட்டினர் நமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தொந்தரவுகள் தந்தாலும், பல உலக அரங்குகளில் (நியாயமான விஷயங்களில்) அவர்களுக்கும் தோள் கொடுத்தது இந்த நாடு. உறவுக்கு பாலம் மட்டுமல்ல, சாலை மற்றும் இருப்புப் பாதை போட்டதும் இந்த நாடு.




இப்படிப் பட்ட பெருமைகள் கொண்ட ஒரு நாடு, போரில் கூட தர்மம், நியாயம் பார்த்த நாடு, சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு வருந்தத் தக்க நிகழ்வின் காரணமாகவே, தன் நாட்டின் மிக அருகே நடைபெறும் ஒரு இனப் படுகொலையை (Genocide) கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்பதை மனம் நம்ப மறுக்கிறது.




இந்நிலைக்கு, வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும்.





வாருங்கள். சிந்திப்போம்.




நம்மில் சிலரே, தமிழ் பற்றி பேசுபவன் தமிழ் தேசியவாதி (Tamil Nationalist) என்றும், தமிழர் நலம் பற்றி பேசுபவன் தமிழ் அடிப்படைவாதி (Tamil Fundamentalist) என்றும், இலங்கை தமிழர் படும் பாடு பற்றி பேசுபவன் தமிழ் பயங்கரவாதி (Tamil Terrorist) என்றும் முத்திரை குத்தி வந்துள்ளனர். நமது மாநிலத்திலேயே, முக்கிய தலைவர்களும், பொது மக்களில் பலரும் இந்த பிரச்சினை பற்றி வெளிப்படையாக பேச தயங்கி வந்ததற்கு இதுவே காரணமாக இருக்க முடியும்.




இந்த பதிவர் கூட, இந்திய இறையாண்மையின் மேல் பிடிப்பும், ஒருமைப்பாட்டின் மேல் பற்றும், தேச நலன் மீது அக்கறையும், அரசியல் சட்டத்தின் மேல் நம்பிக்கையும் கொண்ட ஒரு இந்தியக் குடிமகன்தான்.



ஆனால், அதே சமயத்தில், தனது சகோதர இனம் படும் பாடு கண்டு கண்ணீர் பெருகுவதையும் , அவர்தம் மீது இழைக்கப் படும் கொடுமை கண்டு நெஞ்சம் பதறி துடிப்பதையும் எப்படி தடுக்க முடியும்?




முதலில் நம் மக்களுக்கு ஒன்று புரிய வைக்க வேண்டும். அதாவது , இலங்கை வாழ் தமிழர் நலன் குறித்து அக்கறை கொண்டவர்கள், இந்திய நலனுக்கு எதிரானவர்கள் அல்ல என்று.




அடுத்து, நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.




கிழக்கு வங்க மக்கள் அவதியுற்ற போது, அதனை யாரும் வங்க மொழி பேசும் மக்களின் பிரச்சினையாக மட்டும் பார்க்க வில்லை. முழு இந்தியர்களின் பிரச்சினையாகவே அது கருதப் பட்டது. ஆனால், தற்போதோ, இலங்கை பிரச்சினை தமிழர்களின் பிரச்சினையாக மட்டுமே நோக்கப் படுகிறதோ என்ற ஐயப்பாடு எழுகிறது. இலங்கையில் வாழும் நம் சகோதரர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, அவர்கள் ஒரு வகையில் (ஆதி) இந்தியர் கூட எனும் முக்கிய கருத்தினை நாம், மத்திய அரசுக்கும், மற்ற மாநில மக்களுக்கும் சரி வர உணர்த்தாமல் போய் விட்டோமோ என்றும் தோன்றுகிறது.




சரி. நாம் இப்போது என்ன செய்வது?




இந்த பிரச்சினை, இந்தியர் அனைவரும் கவனிக்க வேண்டிய பிரச்சினை என்று நாம் அனைவரையும உணர செய்ய வேண்டும். அதற்கு , முதலில் நம் மாநில மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் இந்த பிரச்சினையில் யாருக்கு எவ்வளவு அரசியல் லாபம் என்பதை மட்டும் கவனித்து கொண்டு இருக்காமல், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ அல்லது தலைவருக்கோ அதிக புகழோ பெயரோ கிடைத்தாலும் கூட நம் சகோதரர் இன நன்மைக்காக மற்றவர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் மிகவும் நல்லது. முக்கியமாக ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் இந்த விஷயத்தில் இலங்கை தமிழர் நலன் என்ற ஒரே குறிகோளுடன் செயல் பட்டால் உத்தமம்.




மேலும் ஒவ்வொரு அரசியல் தலைவரும், டெல்லி மற்றும் இதர மாநிலங்களுக்கு பயணம் செய்து அங்குள்ள தலைவர்களுடன் இலங்கை தமிழர் படும் பாடு குறித்து தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைத்து ஒருமித்த கருத்து உருவாக்க முயல வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் இது குறித்த கருத்தரங்குகள் நடத்தலாம். இந்த பிரச்சினைத் தீர்வுக்காக, அகில இந்திய அளவில், அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால் சாலச் சிறந்தது.

இந்தியர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள். இந்த பிரச்சினையின் தீவிரம் குறித்து அவர்கள் உணர்ந்து கொண்டு ஓரணியில் திரண்டால் போதும். மறு நிமிடமே , இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறந்து விடும் என உறுதியாக நம்புகிறேன் .



நம்புவோம் நல்லது நடக்குமென்று. அதுவும் விரைவில் நடக்குமென்று.





Limitations live only in our minds. But if we use our imaginations, our possibilities become limitless.

~ Jamie Paolinetti



1 comment:

குடுகுடுப்பை said...

நல்லது நடக்கும் என நம்புவோம்.

Blog Widget by LinkWithin