Saturday, October 4, 2008

பங்குச் சந்தை குதிரைப் பந்தயக் களமா? ஒரு அலசல்.


சில காலம் முன் வரை, பங்குச் சந்தை என்பது, (வேகமாக) லாபம் பார்க்கும் துறையாக கருதப் பட்டு வந்தது.



தற்போது, பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.


உடனே, பலரும், இப்போது , பங்குச் சந்தை என்பது, ஒரு சூதாட்டக் களம், அதில் முதலீடு செய்தால் அதோகதி என்பது போலவும் கூறி வருகிறார்கள்.


முதல் கருத்து எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு இரண்டாவது கருத்தும் கூட.



மேலும் சந்தை வீழ்ந்து விடுமோ என்ற பயத்தில் மட்டுமே, இந்த பக்கம் பார்க்க மறுப்பவர்கள், இரு பக்கமும் தவறு செய்பவர்களாகி விடுவார்கள்.



என்னைப் பொருத்த வரையில், பங்குச் சந்தை என்பது, தன் போக்கில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஜீவ நதியைப் போன்றது.



அதனால் நாட்டிற்கும் உபயோகம் உண்டு. விட்டிற்கும் உபயோகம் உண்டு.


தக்க வகையில், உபயோகித்துக் கொள்வது உங்கள் பாடு.


என் நண்பர்களிடம் நான் கூறுவது உண்டு,


"Market is bad as long as you don't understand it."



நன்றாக நீச்சல் அறிந்தவர்கள் மட்டுமே, அதன் ஆழம் (குறுகிய கால லாபம்) பார்க்க ஆசை பட வேண்டும். மற்றவர்கள் வெளியில் இருந்து அதன் இதர பயன்களை அனுபவித்துக் கொள்ளலாம். நதியே தேவையில்லை என்று கூறினால் அவர்களுக்குத்தான் நஷ்டம்.


(இப்பதிவரும் கூட, நன்றாக நீச்சல் அடிக்க தெரிந்தவரல்ல. ஆனால், (பெருவெள்ளத்தில்) நன்றாக நீச்சல் அடிக்க வராது, என்று நன்கு தெரிந்திருந்த காரணத்தினால், ஆற்றுக்கு உள்ளே செல்லாமல் ஒரு ஓரமாகவே இருந்ததினால், சென்ற முறை தலைக்கு மேல் வந்த பெரு வெள்ளத்தில், தலைப் பாகை கூட இழக்காமல், காலணி மட்டுமே இழந்தவர்).


நதியின் வேகம் மற்றும் போக்கினை அணை கொண்டு கட்டுப் படுத்தி, மக்கள் அனைவருக்கும் நன்மை அளிக்க செய்ய வேண்டியது, அரசின் கடமை ஆகும். அந்த கடமையை சரி வரச் செய்யாததும் , இப்போது நாம் பார்க்கும் பங்குச் சந்தையின் அவல நிலைக்கு ஒரு காரணம்.



நதியைக் கடக்க உதவ வேண்டிய, சில பரிசல் காரர்கள் (பங்கு தரகர்கள்), குறுகிய லாப நோக்கின் காரணமாக, நதியின் மற்றொரு பக்கம் (வெள்ளத்தின் கடுமை) பற்றி சரியாக அறிவுரை வழங்காததும் ஒரு காரணம்.



சரி, இப்போது நாம் என்ன செய்வது?


பங்கு முதலீட்டால், உலகின் முதலாம் பணக்காரராக உயர்ந்த, திரு.வாரன் பப்பெ (Warren Buffet) கூறுகிறார்.


Others' greed is your fear and Others' fear is your opportunity.


அந்த மாபெரும் முதலீட்டு நிபுணர், இந்த தெளிவற்ற, பயம் நிறைந்த சூழலில் கூட, தனது முதலிடுக்களைச் செய்ய ஏற்கனவே தொடங்கி விட்டார்.



நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?


இன்னும், எந்த அளவிற்கு சந்தை விழப் போகிறது என்று அச்சப் படுபவர்களுக்கு, ஒரு சிறிய கதை.


ஒருவனுக்கு கடவுளைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் வெகு நாட்களாக இருந்தது.


ஒரு முறை, கடவுள், அவனை இரவில், ஒரு மலை உச்சியில் சந்திக்கச் சொன்னார்.


அவனும் சென்றான். அங்கோ கடும் இருட்டு. மலை உச்சியில் இருந்து தவறி அதல பாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கிறான் . இடையில் உள்ள ஒரு மரக்கிளையைப் பற்றிக் கொண்டு தொங்குகிறான். மேலே கீழே, ஒன்றுமே தெரிய வில்லை. எங்கு பார்த்தாலும் இருட்டு.


அப்போது, கடவுளின் குரல். "பயப் படாதே, நான் கீழே இருக்கிறேன், குதித்து விடு . உன்னை நான் பற்றிக் கொள்கிறேன்"


ஆனால், அவன் குதிக்கவே இல்லை. காலையில்தான் தெரிய வந்தது. அவன் தொங்கிக் கொண்டிருந்தது, தரைக்கு, வெறும் ஒரு அடிக்கு மேலே என்று.

அதைப் போலத்தான் பெரும்பாலான நமது பயங்களும் கூட.


எனவே, பங்குச் சந்தையைப் பற்றிய பயங்களை அகற்றி விடுங்கள். தெளிவாக சிந்திக்கும் போது வழி தெரியும்.


பங்குச் சந்தையில் (trading) விளையாட வேண்டுமா?


நீச்சல் கற்றுக் கொண்டால் மிகவும் நல்லது. அல்லது, ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு நல்ல பரிசல் காரரை தேர்வு செய்யுங்கள்.


முதலீட்டாளர்கள்?



இந்த சூழ் நிலையில் எவ்வாறு முதலீடுகள் செய்ய வேண்டும் என்பதனையும் எந்த மாதிரி நிறுவனங்களின் பங்குகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதனையும் இப்பதிவர் மற்றொரு பதிவில் விளக்கி உள்ளார்.


(http://sandhainilavaram.blogspot.com/2008/09/2.html)


மேலும் சில கருத்துக்கள் இங்கே.


சிறந்த பரஸ்பர நிதிகள் மற்றும் சந்தை நிதிகளில் (I personally would prefer Exchange Traded Funds of Nifty and Sensex) மாதந்தோறும் முதலீட்டு செய்யுங்கள்.


உங்கள் வாரக் கடைசி செலவினங்களில் (Weekend expenditure) ஒரு பகுதியை குறைத்து, அதை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்யுங்கள். இழப்புக் குறித்த பயம் வராது.


வாழ்க்கை நிதித் திட்டம் (Personal Finance), குறித்த ஒரு சிறந்த புத்தகம் "Stock to Riches" by Parag Parikh. இது ஒரு மிக எளிய நடையில் நம் செலவினங்களை எப்படி கட்டுப் படுத்தி, சிறந்த முதலீட்டுப் பையை (Investment Portfolio) உருவாக்குவது எப்படி என்பதை சிறப்பாக விளக்குகிறது.


மேலும், எப்படி, உங்கள் நகை மற்றும் வீடு போன்ற முதலீடுகளில் நாள்தோறும் சந்தை மதிப்பு பார்ப்பது கிடையாதோ, அதே போல, பங்குகளின் தினசரி மதிப்பைப் பார்த்துக் கொண்டு இருக்காதீர்கள்.


நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக் குறித்து மட்டுமே அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.


ஊடகங்கள் வாயிலாக, இந்த செய்திகளைப் பற்றி தெரிந்து கொள்வதை விட, நேரடியாக (NSE/ BSE / RBI/ Company Websites) தெரிந்துக் கொள்ள முயலுங்கள். நல்ல தரகரின் உதவி பெறலாம்.


தங்கம், இரும்பு, விவசாய பொருட்கள் போன்றவற்றின் சந்தைக்கும், பங்குச் சந்தைக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இங்கே .


மற்ற சந்தைகளில் ,


விலை அதிகரித்தால் தேவை குறையும்


விலை குறைந்தால் தேவை அதிகரிக்கும்


ஆனால், பங்குச் சந்தையில்,


விலை அதிகரித்தால் தேவை அதிகரிக்கும்


விலை குறைந்தால், தேவை குறையும்


(ரியல் எஸ்டேட்டுக்கும் இது ஓரளவிற்கு பொருந்தும்)


எனவே, பங்குச் சந்தை சற்று வித்தியாசமானது, ஆனால், சூதாட்டக் களமல்ல.


தேசத்தின் வளர்ச்சி மற்றும் அதன் நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றின் பயன்களை நம்மைப் போன்ற சாதாரண மக்கள் அடைய, பங்குச் சந்தை மட்டுமே வழி.


ஒன்றை நினைவில் கொள்வோம்.


அமெரிக்காவின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் அதன் சிறந்த பங்குச் சந்தைகளே. ஆனால் அமெரிக்காவின் தற்போதைய வீழ்ச்சிக்குக் காரணம் அதன் பங்குச் சந்தைகள் அல்ல. ரியல் எஸ்டேட் மற்றும் பிணயக் கூறுகளே (Securitisation and Derivatives market).


கடைசியாக சில வார்த்தைகள்.


உங்கள் வருங்கால பொருட் தேவைகள், அதனைப் பூர்த்திச் செய்வதற்கான சேமிப்பு மற்றும் முதலீட்டின் அளவை முடிவு செய்யுங்கள்.


முதலீடு பையின் விகிதம் (Investment Mix) மற்றும் கால அளவு (Investment Horizon) தேர்ந்தெடுங்கள். (தங்கம், பங்கு, நிலம் மற்றும் வங்கி வைப்பு தொகைகள்)


அந்த பையில் பங்குகளின் பங்கென்ன என்பதையும் தீர்மானியுங்கள்.


வளரும் துறை மற்றும் அத்துறையில் நன்கு செயல் படும் நிறுவனங்களின் பங்குகளைத் தேர்வு (நேரடியாக அல்லது நம்பிக்கையான தரகரின் துணை கொண்டு) செய்யுங்கள்.



அங்கு முதலீடு செய்யுங்கள்.


பின்னர், கவலையை விடுங்கள்.



மீண்டும் சந்திப்போம்

2 comments:

மங்களூர் சிவா said...

முஸ்தபா முஸ்தபா டோண்ட் வர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா!!

Ganesan said...

stock market is differnt stroke of business, u cant compare with ordinary business, , first point trading is very dangerous one for players in stock market 99% lossers in this game , it is really gamling one, trading.
second one is deliveries, u can take good stock as deliveries , but the time is more important, lof of good analysis is needed for taking deliveries, but when market in a very much pessimisom mode u can take good delievreis for a period of 1-3 years, inthis also profit booking is important, when ur delivery stock given good returns u should book profit.

many and many people still couldnot catch the up the market corrcet way even after doing stocks for more than 15 years.

only one suggestion look for the stocks when all are gone out from the market at th cheap values, wait for 1-5 years , u can get good returns.
ie my view.
thanks
wishes
ganesh

Blog Widget by LinkWithin