Saturday, November 1, 2008

அச்சம் தவிர்க்காதீர்!


பைபிள் முதல் பாரதி வரை அனைவரும் சொல்வது "அச்சம் தவிர்". இன்றைய மனவியல் நிபுணர்கள் கூட எப்படி அச்சத்தை தவிர்ப்பது என்று பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். அச்சம் என்பது பொதுவாக விரும்ப முடியாத, அவநம்பிக்கை அளிக்கக் கூடிய, மன வருத்தம் தருகின்ற உணர்வாகவே மக்கள் கருதுகிறார்கள்.

ஆனால், உண்மையில் அச்சம் என்பது நம்மை பல ஆபத்துகளில் இருந்து பாதுகாத்து கொள்ள உதவுவதற்காக இயற்கை நமக்கு வரமாக அளித்த ஒரு அற்புதமான உணர்வு.

உதாரணமாக, நெருப்பின் மிக அருகே நம்மை செல்லாமல் தடுப்பது, நடு சாலையில் நடக்காமல் நம்மை தடுப்பது, மனதுக்கும் உடலுக்கும் தீயதான பழக்கங்களில் இருந்து நம்மை காப்பது எல்லாமே அச்ச உணர்வுதான். மான் புலியிடம் இருந்து ஓடி தப்பிப்பது கூட அச்ச உணர்வினால்தான்.

எனவே, அச்சத்தினை முழுமையாக ஒதுக்க முயற்சிப்பதை விட அச்சத்தினை எவ்வாறு நமது வாழ்விற்கு உபயோகப் படுத்தலாம் என்று பார்ப்பது நல்லது.

முதலில் அச்ச உணர்வு உடலில் என்னென (இயற்பியல் மற்றும் வேதியியல்) மாற்றங்களை உருவாகுகிறது என்று பார்ப்போம்.

அபாய எச்சரிக்கை மூளைக்குள் சென்றதும், மூளை மற்ற வேலைகளை நிறுத்தி விட்டு அபாயத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்துகிறது. இருதயம் வேகமாக துடிக்கிறது. அதிக அளவிலான ரத்தம் உடலின் முக்கிய (அபாயத்திலிருந்து காக்க தேவையான) தசைப் பகுதிகளுக்கு செலுத்த படுகிறது. உணவு ஜீரணம் போன்ற உடனடி அவசியம் இல்லாத வேலைகள் நிறுத்தப் படுகின்றன. Adrenaline அதிக உற்பத்தி ஆகிறது. எதிர்க்கலாமா அல்லது ஆபத்திலிருந்து தப்பிக்கலாமா என்ற முடிவு மூளையினால் வேகமாக எடுக்கப் படுகிறது. உடல் என்ற அற்புத இயந்திரதிற்குள்ளே, இந்த செயல்கள் அனைத்தும் நம்ப முடியாத வேகத்தில் நடந்து முடிகிறது.

ஆனால், நடை முறை வாழ்க்கையில் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு, புதிய உறவுகளை சந்தித்தல், புதிய இடங்கள், மேடைப் பேச்சு போன்ற மனிதனுக்கு பெரும் ஆபத்து விளைவிக்காத விஷயங்களில் கூட பலருக்கு அச்ச உணர்வு தோன்றுகிறது. சிலருக்கு, கரப்பான் பூச்சி, நாய்கள் போன்ற விஷயங்களில் கூட அச்ச உணர்வு (போபியா) தோன்றுகிறது. இதனால், மேற்கூறிய உடலின் இயற்பியல் வேதியல் மாற்றங்கள் உடலுக்குள்ளே அடிக்கடி நடந்து உடலை மிகவும் சோர்வுக்கு உட்படுத்துகின்றன. மேலும் அடிக்கடி அடிப்பதினால் பழுதடைந்து அபாய மணி உண்மையான அபாய சூழ்நிலைகளில் சரியாக வேலை செய்யாமல் போய் விடுகிறது. இதன் காரணமாக, உண்மையான அபாய சூழ்நிலைகளில் இருந்து மனிதன் தப்பிக்க முடியாமல் போய் விடுகிறது.

அச்சம் என்பதனை மனவியல் நிபுணர்கள் காட்டில் உள்ள புதை குழிகளுக்கு ஒப்பிடுகிறார்கள். உண்மையில் புதை குழிகள் நாம் நினைப்பதை போல மிக ஆபத்தானவை அல்ல. நம்மை கொல்லக் காட்டிற்குள்ளே பொறி வைத்து காத்திருக்கும் பயங்கர வில்லன்களும் அல்ல. அவை உயிரற்ற மணலும் நீரும் கலந்த ஒரு குழி அவ்வளவே. அவற்றுள் தவறி விழுந்தாலும் கூட, ஒருவர் அமைதியாக இருந்தால் மிதக்க முடியும். பின்னர் மெல்ல மெல்ல நகர்ந்து வெளி வந்து விட முடியும். மாறாக, பெரும்பாலோர் கையையும் காலையும் வேகமாக புதைகுழியின் மேல் அடித்து தாம் உள்ளே போக தாமே காரணமாகி விடுகிறார்கள். இதற்கு காரணம் புதை குழி பற்றி முழு விவரம் தெரியாமல் போன அறியாமையே தவிர புதை குழி உண்மையான காரணம் அல்ல.

எனவே, அச்சத்தினை முழுமையாக தவிர்க்க முயற்சிப்பதையும் வெல்ல முயற்சிப்பதையும் விட்டு விட்டு, எதற்காகவெல்லாம் நாம் அச்சப் படுகிறோம் என்று அறிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. மேலும் அந்த விஷயங்களில் உண்மையில் அபாயம் இருக்கிறதா என்று புரிந்து கொண்டு அபாயமில்லாத விஷயங்களுக்கு அச்சப் படும் வழக்கத்தினை மட்டும் மாற்றிக் கொண்டால் போதும் உடலுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது.

நன்றி.

7 comments:

வடுவூர் குமார் said...

என்னதான் சொல்லுங்க...பயந்தபிறகு தான் எதற்கு இப்படி பயப்படுகிறோம் என்று யோசிக்கமுடிகிறது.

Maximum India said...

நீங்கள் சொல்வது கூட நீங்கள் சொல்வது கூட ஒருவகையில் உண்மைதான்

ஆ.ஞானசேகரன் said...

பயம் என்பதும், மனிதன் உணர்வுதானே! பயம் எங்கு? எப்படி? எதற்கு? என்பதில்தான்.... தேவை புரிகின்றது.. நானும் பயம் பற்றி கொஞ்சம் கிருக்கியுள்ளென்.. நேரம் இருந்தால் படித்து பாருங்கள் நண்பரே..http://aammaappa.blogspot.com/2008/10/blog-post_31.html

Maximum India said...

அன்புள்ள ஞான சேகரன்

உங்களுடைய பதிவினையும் படித்துப் பார்த்தேன். இயல்பாக எழுதி இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

Adriean said...

மிக அருமையான பதிவு.

ஆ.ஞானசேகரன் said...

//அன்புள்ள ஞான சேகரன்

உங்களுடைய பதிவினையும் படித்துப் பார்த்தேன். இயல்பாக எழுதி இருக்கிறீர்கள்.//
உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே,

Maximum India said...

அன்புள்ள சந்திரன்.

நன்றி.

இது போன்ற மேலும் பல பதிவுகளை இட தங்களின் ஊக்குவிப்பை கோரும்

Maximum India

Blog Widget by LinkWithin