Tuesday, November 18, 2008

வாழ்க்கை பிரச்சினைகளால் மனம் தளர்ந்து போகிறீர்களா?


கவலைப் படாதீர்கள். நம்பிக்கைகளால் மன தளர்ச்சிகளை வெல்ல முடியும். சொல்பவர் யார் தெரியுமா? பிறவியிலேயே கை கால்களை முழுமையாக இழந்தும் வாழ்வில் வெற்றிபெற்ற திரு.நிக். இந்த நம்பிக்கை நட்சத்திரத்தைப் பற்றி சில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்.

ஆஸ்திரேலியாவில் பிறந்த இந்த நிக் தனது இயலா நிலையை எண்ணி மனம் நொந்து எட்டு வயதில் தற்கொலைக்கு முயன்றார். பெற்றோரின் அன்பையும் அவர்களுக்கு தனது தற்கொலை முடிவால் நேரிடக் கூடிய மன வருத்ததையும் எண்ணி அந்த முடிவை அப்போது கை விட்டார் நிக்.
(நிக் பற்றிய வீடியோ படம் )

பின்னர், தன்னை போலவே பிறவியிலேயே ஊனமுற்றவர்கள் சிலரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார் இவர். அதில் ஒருவரை இறக்கும் தருவாயில் நிக் சந்திக்க, அந்த கடினமான சூழ்நிலையிலும் புன்னகைத்த அந்த புதிய நண்பரின் தன்மை இவருடைய மன நிலையை பெரிதும் பாதித்தது. இறக்கின்ற தருவாயில் கூட ஒருவரால் புன்னகைக்க முடிகிற போது தன்னால் ஏன் உற்சாகமாக வாழ முடியாது என்ற கேள்வி அவரது மனதுக்குள் எழுந்தது.

அன்றிலிருந்து இன்று வரை அவர் பெற்ற வெற்றிகள் ஏராளம். கணக்கியலில் பட்டம் பெற்ற இவர் சொந்தமாக ஆரம்பித்தது இரு நிறுவனங்கள். (Attitude is Attitude and Life without limbs). உலகெங்கும் பயணம் செய்துள்ள இவர் தனது 25 வயதிற்குள்ளே இது வரை 23 நாடுகளில் 20 லட்சம் பேருக்கு உற்சாக உரை (Motivational Speech) நிகழ்த்தி உள்ளார். (இதுவே ஒரு மிகப் பெரிய சாதனை அல்லவா?) இப்போது இந்தியா வந்திருக்கும் இவர் மேலும் பல நாடுகள் செல்லும் உத்தேசத்தில் உள்ளார்.

பொருளாதார சிக்கல் நிறைந்த இன்றைய சூழ் நிலையில் நம் இளைஞர்களுக்கு அவர் கூறும் சில யோசனைகள் கீழே.

"பயம் என்பது உண்மை போல தோன்றும் பொய் (FEAR = False Evidence Appearing to be Real)

அதை நம்பிக்கை கொண்டு வென்றிடுங்கள். நம்பிக்கை என்பது உள்ளத்தின் மீது வைக்கும் முழு உறுதிப்பாடு (FAITH = Full Assurance In The Heart).

இது வரை வாழ்வில் எடுத்த தவறான முடிவுகளுக்காக கவலைப்படாதீர்கள். ஏனென்றால் எப்படி எடிசன் தனது தவறான ஆராய்ச்சிகளின் உதவியை கொண்டு பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தாரோ அது போல உங்கள் தவறான முடிவுகள் சரியான முடிவுகளை எடுப்பதற்கு உதவி செய்யும்.

எது வெற்றி என்பதில் தெளிவாக இருங்கள். சிலருக்கு பணம் வெற்றி, சிலருக்கு பதவி வெற்றி. சிலருக்கோ அமைதியான வாழ்வு வெற்றி. நான் பெற்ற வெற்றி என் வாழ்வின் நோக்கத்தை அடைந்தது (மற்றவருக்கு நம்பிக்கை அளிப்பதன் மூலம்). நான் சந்தித்த பல பணக்காரர்கள் என்னை விட குறைந்த அளவு மனநிறைவுடன் வாழ்வதாகவே அறிகிறேன். நரகத்தில் வாழ்ந்து சொர்கத்தை அடைவதை விட சொர்க்கத்தில் வாழ்ந்து நரகத்தை அடைய விரும்புகிறவன் நான். எனவே நண்பர்களே, எதை இழந்து எதை பெறுவது என்ற உங்களுடைய முடிவில் தெளிவாக இருங்கள்.

எதை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்."

குண்டு வெடிப்புகளையும், கொலை கொள்ளை போன்ற விஷயங்களையுமே முதல் பக்கத்தில் போடும் நம் பத்திரிக்கைகள் இதை போன்ற நல்ல விஷயங்களையும் முதல் பக்கத்தில் போட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

நன்றி.

2 comments:

MCX Gold Silver said...

//எதை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்."//


மிக சிறந்த வாக்கியம்

Maximum India said...

Thank You Dg

Blog Widget by LinkWithin