Friday, November 7, 2008

ஒப்பீடு (Comparison) செய்கிறீர்களா?




பறக்கும் சீக்கியர் (Flying Sikh) என்று அழைக்கப் பட்ட மில்கா சிங் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிறிக்கிறீர்களா ? இந்தியாவின் மிகச் சிறந்த தடகள விளையாட்டு வீரர்களில் ஒருவராக கருதப்படும் அவர் 1960 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மயிரிழையில் பதக்கம் தவற விட்டதற்கான காரணம் தெரியுமா?

மில்கா சிங் பறக்கும் சீக்கியர் என்று அழைக்கப்பட்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மேலே குறிப்பிட்ட ஒலிம்பிக் போட்டிக்கு முன்னர் நடைப் பெற்ற சர்வதேச பந்தயத்தில் (அப்போதைக்கு) உலக சாதனை செய்து முத்லாவாதாக வந்தவர் அவர். ஒலிம்பிக் முதல் நிலை போட்டியில் கூட அவர் பெற்றது இரண்டாவது இடம். தங்கம் வெல்வார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அவர், தனது ஓட்டத்தினை மிக வேகமாக தொடங்கினார். பாதியில் மற்றவர்கள் மிக நிதானமாக ஓடி வருவது போல அவருக்கு தோன்றியது. (உண்மையில் அவர்களால் இவர் வேகத்திற்கு ஓட முடியவில்லை) முதல் பாதியில் அவர்களைப் போல நிதானமாக ஓடினால்தான் தன் சக்தியை சேமித்து இறுதியில் மிக வேகமாக ஓடி கோப்பையை வெல்ல முடியும் என்று தவறாக நினைத்து வேகத்தினை சற்று மட்டுப்படுத்தினார். விளைவு, தங்கம் வெல்ல வேண்டியவர் இறுதியில் வெண்கலம் கூட வெல்ல முடியாமல் போனது. இன்றைக்கும் அதை நினைத்து அவர் வருந்தி வருகிறார்.

நாம் கூட பல சமயங்களில் மற்றவர்களோடு நம்மை ஒப்பீடு செய்து பார்க்கிறோம். அவர் போல நாம் குறிப்பிட்ட படிப்பு படிக்க வில்லையோ? இவரைப் போல குறிப்பிட்ட துறையில் சேர வில்லையோ? அவர் வாங்கியது போல அந்த குறிப்பிட்ட பிராண்ட் வாகனம் அல்லது இந்த இடத்தில நிலம் வாங்கி இருக்கலாமோ? இப்படி ஒவ்வொரு நிமிடமும் நம்மை நாமே சித்திரவதை செய்து கொள்கிறோம். ஒரு வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலான தருணங்களில் நாம் ஒப்பீடு செய்யும் நபரும் கூட இதே போல வேறொருவரை அல்லது நம்மையே ஒப்பீடு செய்து குழம்பிப் போய் இருப்பார்.


நம்முடைய கனவு தொழிற்சாலையையே எடுத்துக் கொள்வோம். அனைவருக்கும் தெரியும். கமல் அவர்கள் ஒரு வசீகர தோற்றமுள்ள, உருவாக்கும் திறன் மிகுந்த சிறந்த நடிகர். அவர் மிகப் பெரிய வெற்றி பெற்றதில் எந்த சந்தேகம் இல்லை. அதே சமயம் திரு.வடிவேலு, திரு.செந்தில் போன்றவர்கள் கூட திரைத் துறையில் மிகப் பெரிய வெற்றி பெற்று உள்ளனர். கமலுடன் இவர்கள் ஒப்பீடு செய்து அவரைப் போல வசீகர தோற்றம் பெற முயற்சி செய்திருந்தால் அவர்களால் இந்த உயரத்திற்கு வந்திருக்க முடியுமா? தமது வசீகரமற்ற தோற்றத்தையே ஒரு மூலதனமாக மாற்றிக் கொண்டு இதரத் திறமைகளை முன்வைத்து போராடியதாலேயே அவர்களால் இன்றைக்கு போட்டி மிகுந்த ஒரு துறையில் நிலைத்து நிற்க முடிகிறது.




எனவே ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் திறமை உண்டு என்ற உண்மையைப் புரிந்து கொண்டு தனது சொந்த திறனை இனம் கண்டு, அதை உரிய முறையில் வளர்த்துக் கொண்டால் நம்மால் (நம்மளவில்) மிகப் பெரிய வெற்றிகளை அடைய முடியும். இதை விட்டு ஒப்பீடு செய்வது என்பது நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் ஒரு செயலே.

நன்றி

No comments:

Blog Widget by LinkWithin