Skip to main content

"பெயர்" அளவில் ஏற்பட்டுள்ள சமூக புரட்சி


சமீபத்தில் எனக்கும் ஒரு மராத்தியருக்கும் இடையே ஒரு சிறிய விவாதம் எனது பெயரிலிருந்து தொடங்கியது. என்னுடைய பெயரின் இரண்டாவது பகுதி, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகத்தில் வாழும் ஒரு சமூகத்தினரின் பட்டப் பெயரை குறிப்பதாக இருப்பதால், அவர் (மிகவும் வயது முதிர்ந்த ஒரு மருத்துவர்) என்னை அந்த குறிப்பிட்ட சமூகத்தினை சேர்ந்தவரா என்று வினவினார். நானோ அதை மறுத்து, தமிழகத்தில் பெயருடன் சமூகப் பெயரை இணைத்து வழங்கும் பழக்கமில்லை என்றும் அது எனது முதல் பெயரின் விகுதியே என்றும் கூறினேன். பிறகு விவாதம் தமிழ் நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் தற்போதைய சமூக மற்றும் பொருளாதார சூழல் பற்றி திரும்பியது.

அவர் கூறியது. மராத்திய மக்கள் பரந்த மனது கொண்டவர்கள். மொழியின் அடிப்படையில் வித்தியாசம் பார்க்காதவர்கள் அதனால்தான் மகாராஷ்டிரா மாநிலம் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஆனால், இங்கு வாழும் பிற மொழி மக்கள் மராத்தியரின் பெருந்தன்மையை தவறாக உபயோகப் படுத்தி மராத்தி மொழியை மற்றும் மராத்திய கலாச்சாரத்தினை மதிக்க தவறுகிறார்கள். தமிழ் நாடு போன்று பிற்போக்கான மொழி மற்றும் சமூக கொள்கையை நாங்களும் பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்திருந்தால் நாங்களும் பின்தங்கிய மாநிலமாக இருந்திருப்போம்.

நான் அதற்கு பதிலளிக்கையில், மராத்திய மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே எனது கருத்தும் ஆகும். அதே சமயத்தில் இந்தியாவின் நிதித் தலைநகரமான மும்பையை உள்ளடக்கியப் பின்னரும் கூட மகாராஷ்டிரா பல சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற விஷயங்களில் (Urbanization, Industrialization, Literacy Rate etc), தமிழ் நாட்டை விட பின்தங்கிய மாநிலமாக இருப்பதையும் இந்தியாவிற்கே தமிழ் நாடு ஒரு முன்னோடி மாநிலம் என்பதையும் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினேன். மும்பை இல்லாவிடில் இரு மாநிலங்களுக்கிடையே இடைவெளி இன்னும் கூட அதிகம் இருக்கும் என்றும் சொன்னேன்.

ஆனால் அவரோ, பொருளாதார அடிப்படையில் தமிழ் நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கலாம். ஆனால் சமூக கொள்கைகள் அடிப்படையில் தமிழ் நாடு பின்தங்கிய மாநிலமே என்று மீண்டும் விதண்டாவாதம் செய்ய, யார் சமூக கொள்கைகளின் அடிப்படையில் உயர்ந்த சிந்தனைகள் கொண்டவர்கள் என்பதை அவரவர் அழைக்கப் படும் பெயரை வைத்தே தெரிந்து கொள்ளலாம் என்று விவாதத்தை முடித்து கொண்டேன். அதன் உட்பொருள், தமிழ் நாட்டில் சாதியின் அடிப்படையில் அமைந்த பட்டப் பெயரால் ஒருவரை அழைக்கும் வழக்கம் சென்ற தலைமுறைகளிலேயே முடிந்து விட, தமிழ் நாடு தவிர்த்து இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த பழக்கம் (அந்த வயதான மருத்துவரையும் சேர்த்து) தொடர்கிறது.

நம்மூரில் அருண் கோவிந்த் கார்த்திக் என்றெல்லாம் அழைப்பதற்கு பதிலாக முதலியாரே, நாயக்கரே, கவுண்டரே என்று அழைத்தால் மிக வேடிக்கையாக உணருவோம் அல்லவா? இவர்களோ, தமது முதல் பெயரால் அழைக்கப் பட்டால்தான் (மிக நெருங்கிய உறவினருக்கு மட்டுமே முதல் பெயரால் அழைக்கும் உரிமை உண்டு) வித்தியாசமாக உணருகிறார்கள்.

இந்தியாவிலேயே இந்த "பெயர்" அளவிலான சமூகப் புரட்சியை ஆரம்பித்து வைத்த பெருமை தமிழகத்திற்கு உண்டு. ஆனால்,இந்த பெயர் புரட்சி இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் நின்று போய் விட்டது. சமூக நீதி கண்ட தமிழகத்தில் கூட இந்த சாதி ஒழிப்பு முயற்சி பெயரளவிலேயே நின்று போய் விட்டது. இன்றைய அரசியல்வாதிகள் , அரசியல் பண்ண, கூட்டணி பேரம் பேச, ஆட்சியை பிடிக்க மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல ஒவ்வொரு நாளும் சமூகப் பெயர்களை உபயோகப்படுத்தி சாதித் தீயை முழுவதுமாக அணையாமல் நீறு பூத்த நெருப்பாக வைத்திருக்கிறார்கள்.

அதே சமயம் சாதாரண தமிழ் மக்களிடையே மற்ற மாநிலங்களைப் போல சாதி உணர்வு அதிகம் இல்லை என்று நான் நேற்று வரை நம்பி இருந்தேன். ஆனால் சாதி மதம் வித்தியாசம் இல்லாமல் கூடி திரிய வேண்டிய வயதில் உள்ள கல்லூரி மாணவர்கள் சாதியின் அடிப்படையின் கொலை வெறி மோதல்களில் ஈடுப்பட்டனர் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், அதுவும் சமூக இணக்கம் அதிகம் காணப்படும் மாநிலமாக கருதப் படும் தமிழ் நாட்டில் இப்படிப் பட்ட சம்பவம் நடந்தேறி இருப்பது அகில உலகில் வாழும் அனைத்து தமிழருக்கும் அவமானம் தேடித் தரும் விஷயம் ஆகும். "சமூக அடையாளம் இல்லாத பெயரால் அழைக்கப் படுதல் " என்று தமிழகத்தில் தொடங்கிய இந்த சாதிக்கு எதிரான சமூகப் "பெயர்" புரட்சி பெயரளவில் நின்று போகாமல் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுதும் முழுமையாக பரவி, எங்கும் நிறைந்து உள்ள சாதி எனும் கொடிய அரக்கனை முழுவதுமாக அழித்து இந்தியர் அனைவரும் ஒரே சாதி என்ற நிலை வந்தால் மட்டுமே நாம் பெற்றது முழுச் சுதந்திரமாக கொள்ள முடியும்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

Comments

நீங்கள் மிகவும் சென்சிடிவான விஷயம் எடுத்துக்கொண்டு பதித்திருகிறீர்கள்.
தமிழ் நாட்டில் சுமார் 100-125 ஆண்டுகளாக சாதி பெயரை surname-ஆக போட்டுக்கொள்ளும் வழக்கம் போய்விட்டது. ( என் தாத்தா 1875/80-ல் பள்ளியில் சேர்ந்த போதே குலப்பெயர் டைட்டில்-ஆக போட்டுக்கொள்ளவில்லை. நான் அவரது SSLC பார்த்து இருக்கிறேன். ) எனவே பேரைப் பார்த்தால் சாதி என்ன என்று தெரியாது; வெட்கம் இல்லாமல் கேட்டு தெரிந்து கொண்டிருந்த காலமும் கிட்டத்தட்ட 1950/60-க்கு பிறகு போய் விட்டது என்றே நினைக்கிறேன் . பீஹாரிலும் 1960-களில் ஜெயப்ரகாஷ் NAARAAYAN ஆரம்பித்து வைத்து சாதி பேரை டைட்டில்/SURNAME போட்டு கொள்ளும் வழக்கத்தை சிலர் விட்டுவிட்டார்கள்: முதல் அமைச்சர் நிதீஷ் குமார் போன்றோரும் அப்படியே. சந்த்ர சேகரும் (சில நாள் பிரதம அமைச்சரை சொல்கிறேன்) தேர்தல் வாக்கு சீட்டில் மட்டும் சௌத்ரி என்று போட்டுக்கொண்டு, மாற்ற நாளில் வெறும் சந்த்ர சேகர் என்று பேசப்பட்டவர் தான். ஆனால், டைட்டில் போட்டுக் கொள்ளும் வழக்கம் பெரும்பாலானவர்களால் தொடரப்பட்டே வருகிறது. ஆனால் மேலும் சில ஆண்டுகளில் இந்த வழக்கம் போய் விடும் என்று நம்பலாம்.
இப்போது, தமிழகத்தில், சாதி பெயர்களை டைட்டில்-ஆக வைத்துக்கொள்ளாத நம்மவர் எப்படியோ சாதியை தெரிந்து கொண்டு, கூடி விடுகிறார்கள்; இல்லை என்றால் சட்டக் கல்லூரியில் நடந்தது போன்று மாணவர்களுக்குள் எப்படி சேர்ந்து கொண்டு பிற சாதி மாணவர்களை அடிக்கிறார்கள்? அவமானம். (இவர்களைத் தூண்டி விடுவது சநாதனம் என்று பேசும் RSS பாசிஸ்டுகள் இல்லையே; இதைப் பற்றி பின்னூட்டம் இடும் புலிகள் கருத்து சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.) இவர்களை தூண்டுவது தம் சாதியை பின்தங்கியது என்று காட்டிக்கொண்டு, ரிசர்வேஷன் தொடர வேண்டும் என்று குறுகிய நோக்கில் சாதிகள் தொடர வேண்டும் என்று மறைமுகமாகவும் நேரடியாகவும் விரும்பும் அரசியல்வாதிகளும் அதைப் போன்ற எண்ணத்துடன் இருக்கும் சாதி தலைவர்களே.
பெரியாரின் நல்ல பெயரை மீண்டும்மீண்டும் சொல்லிக்கொண்டு வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த கட்சிகள் உள்ளந்தரங்கமாக சாதிகளை ஒழிக்கவேண்டும் என்று நினைக்கவே இல்லை என்று குற்றம் சாட்டுகிறேன்; கலப்பு திருமணத்திற்கு பரிசு அறிவித்தால் மட்டும் சாதிகளை களைய விரும்பினோம் என்று மேடையில் முழங்கினால் போதாது, (இதை எழுதுபவர் சோவின் ஜால்ரா அல்ல: இதைப்போல நினைக்கும் நடுநிலை தமிழர்களும் இருக்கிறார்கள்).
சமூக நீதி பற்றி வாய் கிழிக்கும் தலைவர்கள் சாதி சங்கங்களை சட்ட பூர்வமாக ஒழிக்கட்டும்(தாம்ப்ராஸ்-உம் இதில் அடக்கம்.) .
உங்கள் வலைப்பதிவு தொட்டுக் காட்டிய பொருள் குறித்து பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
ஆகவே பெயர் அளவுக்கு இல்லாமல் உண்மையிலேயே சாதிகள் ஒழிக்கப் பட ஏதாவது செய்வார்கள் என ஆசைப் படுகிறேன்.
Maximum India said…
அன்புள்ள ஐயா

பின்னூட்டத்திற்கு நன்றி.

உங்களது கருத்துகள் மிகவும் புரட்சிகரமாக உள்ளன. உங்கள் கருத்துகளில் எனக்கும் உடன்பாடு உண்டு.

சாதி என்பது நம்மை பீடித்துள்ள பெருவியாதி. இதற்கு உடனே மருத்துவம் பார்த்துக் கொள்ளவேண்டியது மிக அவசியம் மற்றும் முதல் கடமை.

அரசியல்வாதிகளின் மீதும் சாதிதலைவர்களின் மீதும் பழி போட்டு விட்டு நாம் கம்மென்று இருந்து விடக் கூடாது. நம்மளவில் இது குறித்த நமது உணர்வுகளை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். இந்த பதிவை பார்க்கும் நண்பர்களும் இது குறித்து தங்கள் உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

உங்களைப் போலவே, இந்த பதிவின் மீது வரக் கூடிய பின்னூட்டங்களை நானும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...