Thursday, November 13, 2008

ஆரு வூட்டு சொத்துக்கு ஆருங்க அடுச்சுக்கிரது?


சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில், எனது சொந்த (ஊரின் பேச்சு) நடையில் ஒரு கற்பனையான சிறு (தொடர்?) கதை இங்கே. சரியாக புரிந்து கொள்வது உங்கள் பாடு.

ஒரே ஒரு ஊரிலே (பரதம் பட்டின்னு வச்சிக்கோங்களேன்) ஒரு ஜகதலப் பிரதாபன் இருந்தாராம். அவரோட பேரு குரு அண்ணாத்தே-வாம். பழய பாலிஸ்டர் துணி வியாபாரியா பொழப்ப ஆரம்பிச்ச அவரு ஊரிலே பாதிய வளைச்சுப் போட்டுகிட்டாராம். அவருக்கு ரண்டு பசங்க இருந்தாங்களாம். ஒருத்தன் பேரு மகேஷுஅண்ணாத்தே . இன்னொருத்தன் பேரு சுநிலு அண்ணாத்தே. ரெண்டு பேரும் அப்பாவ விட அதிபுத்திசாலிங்கலாம்.

அந்த ஊரிலே கடுமையான நல்ல தண்ணி பஞ்சமாம். குடிக்கற தண்ணிய காசு கொடுத்து பக்கத்து ஊரிலே இருந்து வாங்க வேண்டியிருந்துச்சாம். ஒரு நாளு, ஊரு ஜனங்கெல்லாம் ஒண்ணா சேந்து, ஒரு முடிவு பண்ணாங்களாம். ஊருக்கு கிளக்கு பாத்த மாதிரி இருக்க தெங்காட்டிலே ஊருக்கு சொந்தமான ஒரு இடத்திலே நல்ல தண்ணி நெறைய கிடைக்குதுன்னு ரொம்ப படிச்சவங்க சொல்றாங்க. அதனால அங்க ஊருக்கு பொதுவா ஒரு பெரிய கிணறு வெட்டலாம்னு. அப்புறம் நம்ம தண்ணி கஷ்டமெல்லாம் தீந்து போயிடும். பக்கத்து ஊரிலே இருந்து குடிக்கற தண்ணிய காசு போட்டு வாங்க வேண்டிய அவசியமும் இருக்காது. இதுக்கு அந்த தெங்காட்ட ஓட்டிகிட்டிருந்த தெலுங்கு பேசற கிட்டன நாயக்கரும் கூட ஒத்துக்கிட்டாராம்

நல்ல யோசனயத்தான் இருக்குது, சரி, யாருகிட்ட கிணறு வெட்டற பொறுப்பு கொடுக்கலாமுன்னு பஞ்சாயத்து போர்ட்காரங்க யோசிச்சாங்களாம். அப்ப, துணி வியாபாரத்திலே இருந்து தண்ணி வியாபாரம் வர எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்த குரு அண்ணாத்தே என்ன என்னமோ பண்ணி எப்படியோ இந்த பொறுப்ப ஏத்துகிட்டாராம். "ஊரிலே பணம் வச்சிருக்கவன் எல்லாம் கொஞ்சம் முதல் போடுங்க . கிணறு வெட்டற மிசுனு நான் கொண்டாரன். ஊரு ஜனங்கக்கிட்ட தண்ணிக்கின்னு கொஞ்சம ஜாஸ்தி வரி போட்டு மிசுனுக்கான மான்யமா எனக்கு கொடுத்துடுங்க. இங்க இருக்க மக்களெல்லாம் கொஞ்சம கிணத்து வேலைலே கூட மாட ஒத்தாச பண்ணாப் போதும் வேல சுளுவா சீக்கிறமா முடுஞ்சு போயிடும். கிடைக்கிர தண்ணியிலே ஊருக்கேல்லாம் தண்ணி கொடுத்து முடுஞ்சதும் மிச்ச தண்ணிய மட்டும் என் வியாபாரத்துக்கு யூஸ் பண்ணிகறேன்" னு பஞ்சாயத்துல ஒரு அக்ரிமேண்டு போட்டுகிட்டாராம். போனா போவுது மிச்சத் தண்ணியதானே கேக்கிராருனு மக்களும் ஒத்துகிட்டாங்கலாம்.

கிணத்துல தண்ணி வரதுக்கு முன்னாடியே பெரிய அண்ணாத்தே மண்டைய போட்டுட்டாராம். அவரோட சொத்து முழுக்க பெரியவன் எடுத்துகிட்டானாம். தம்பிக்கு நாமம் போட்டுட்டானாம். தம்பியும் லேசுப்பட்ட ஆளு இல்ல. அம்மாவப் பிடிச்சு ஆடடய போட்டு வேற உள்ளூரு கச்சிகாரங்களப் பிடிச்சு இன்னும் என்னெனவோ பண்ணி அவனுக்குன்னு கொஞ்சம சொத்தப் பிரிச்சிக்கிட்டானாம். அங்க சுத்தி இங்க சுத்தி கடசியா கிணத்துல வந்து நின்னானாம்.

ஒரு கிணத்த எப்படி ரண்டா பிரிக்கறது? ஒரு நிமிஷம், இது ஊரு கிணருன்னு கூட அவங்களுக்கு மறந்துப் போச்சாம். அவங்க சொந்த கிணருன்னே நினசுக்கிட்டாங்கலாம். அவங்க அம்மா முன்னாடி ரண்டு பேரும் ஒரு கிணத்துத் தண்ணிய எப்படி ரண்டா பிரிக்கிரதுன்னு ஒரு குடும்ப அக்ரிமேண்டு போட்டுகிட்டாங்கலாம். அந்த ஊரு மக்களுக்கு ஒண்ணுமே புரியலயாம். எது எப்படியோ நமக்கு குடிக்கற தண்ணி கிடச்சா போதும் கம்னு இருந்தாங்களாம்.

அண்ணன்காரன் தண்ணிய சுத்தம் பண்ற ஒரு பாக்டரி (அதாங்க நம்ம பிஸ்லேரி தண்ணி மாதிரி) ஒன்னு கட்டிபுட்டானாம். தம்பிக்காரன் ஒரு கூல்ட்ரிங் கம்பெனி கட்டிபுட்டானாம். சும்மா சொல்லக் கூடாதுங்க. ரெண்டு பேரும் கில்லாடி பசங்க. அவஅவன் தொழில் ஆராம்பிச்சு வியாபாரம் நல்லா நடந்தாத்தான் நாலு காசு பாக்க முடியும். இவனுங்க பிசினெஸ் சந்தைக்கு வரும் முன்னாடியே என்னெனமோ செஞ்சு ஒருத்தன் பொண்டாட்டிக்கு பெரிய பாரின் கார் வாங்கிட்டான். இன்னொருத்தன் கிடெச்ச பணத்துல மெட்ராசு போயி பெரிய பெரிய ட்ய்ரெக்டர வச்சு படம் புடிக்க ஆரம்பிச்சுட்டான்.

ஊரு நல்ல நேரமா, மகேஷு சுநிலு நல்ல நேரமா தெரிலே. அந்த கிணத்துலே அந்த ஊருக்கு மட்டுமில்லே பக்கத்து ஊருக்கும் போதும் போதுங்கற அளவுக்கு தண்ணி ஊத்து வந்திடுச்சாம். அந்த ஊரு ஜனங்களுக்கெல்லாம் ஒரே சந்தோசமாம். நம்ம கஷ்டமெல்லாம் தீந்து போச்சுன்னு நினச்சிருந்தாங்கலாம்

அப்பனு பாத்து ரண்டு அண்ணன்தம்பியும் அடுச்சுகிட்டாங்கலாம். கிணத்துல வர தண்ணி யாருக்கு சொந்தமின்னு. ரண்டு பேரும் குடும்ப அக்ரிமன்ட எடுத்துக்குட்டு டவுனு கோர்ட்டுக்கு போயிட்டாங்களாம். கிணத்துல தண்ணி வீணா பாழாப் போகுதாம். பஞ்சாயத்து போர்டுகாரங்களுக்கு கூட ஒண்ணுமே புரியலயாம். இவ்வளவு கஷ்டப்பட்டு சொந்த கிணத்துல தண்ணி வந்த பின்னாடி கூட குடிக்கிற தண்ணிக்கு வளியில்லாம இன்னும் பக்கத்து ஊருக்காரங்கக் கிட்ட அந்த ஊரு ஜனங்க நல்ல தண்ணி விலைக்கு வாங்கிட்டு இருக்காங்களாம். கிட்டன நாயக்கரு பண்ணிக்கிட்டு இருந்த விவசாயமும் நின்னுப் போச்சாம்.

அந்த ஊருல ஒரே ஒருத்தனுக்கு மட்டும் ரொம்ப நாளா சந்தேகமாம்.

நெலம் ஊரோடது. உளுதுட்டு இருந்த நெலத்த கொடுத்தவரு தெலுங்கு பேசற கிட்டன நாயக்கரு. முதலுல முக்காவாசி போட்டது அந்த ஊரு பெரிய தலைங்க. தண்ணி வரி கட்டணது ஜனங்க. அத மானியமா கொடுத்தது பஞ்சாயத்து போர்டு. கிணத்த வெட்ட ஒத்தாச பண்ணது மறுபடியும் அந்த பாளாப் போன ஜனங்க. இவங்கள்ளெல்லாம் உட்டுப்புட்டு உரிமை கொண்டாடறது ரெண்டு அண்ணன்தம்பிங்க.

ஆரு வூட்டு சொத்துக்கு ஆருங்க அடுச்சுக்கிரதுன்னுதான் அந்த சந்தேகமாம்.

என்னாங்க அவனோட சந்தேகம் நாயம்தானங்க?

8 comments:

வால்பையன் said...

அட சாமி, பணிரத்னம் கூட இந்த கதய மரச்சி புட்டாரே!

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

சந்தோசங்க

என்னாங்க பண்றது? முடிஞ்ச கதய பேசலாம். ஆரும் ஒன்ன சொல்ல மாட்டாங்க. நடக்கற உண்மய சொன்னா படம் வெளிய வருமா?

KARTHIK said...

ஆஹா எப்புடிங்க இப்படியெல்லாம்

எங்கலுக்கும் அந்த தண்ணி கம்பெனில பங்கு இருக்கு அத என்னங்க பன்னுரது.

அருமைய சொல்லிருக்கீங்க.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//எங்கலுக்கும் அந்த தண்ணி கம்பெனில பங்கு இருக்கு அத என்னங்க பன்னுரது//

உங்களுக்கு மட்டுமில்ல இங்க எல்லாருக்கும் ஏன் இந்த நாட்டுக்கே பங்கு இருக்கு. என்னத்த பண்ண? யாரு கேக்க ?

nerkuppai thumbi said...

கிராமத்து பாணியில் கதை சொல்ல வந்த தாங்கள் பாரதிராஜாவுக்கும் மகேஷு சுநிலு கதைகளை பக்குவமாக சொன்னதால் மணிரத்னமுக்கும் போட்டியாக தயார் ஆகிக்கொண்டிருக்கிறீர்களா என்ன? எதற்கும் அவர்கள் கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது.
தவிர, நம் நாட்டில் இது போன்ற பலப்பல சின்ன சின்ன கதைகளுக்கு கரு ஏராளமாக இருக்கின்றன; தாங்கள் ஒவ்வொன்றாக உங்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Maximum India said...

ஐயா

பின்னூட்டத்திற்கு நன்றி.

//கிராமத்து பாணியில் கதை சொல்ல வந்த தாங்கள் பாரதிராஜாவுக்கும் மகேஷு சுநிலு கதைகளை பக்குவமாக சொன்னதால் மணிரத்னமுக்கும் போட்டியாக தயார் ஆகிக்கொண்டிருக்கிறீர்களா என்ன? எதற்கும் அவர்கள் கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது.

தவிர, நம் நாட்டில் இது போன்ற பலப்பல சின்ன சின்ன கதைகளுக்கு கரு ஏராளமாக இருக்கின்றன; தாங்கள் ஒவ்வொன்றாக உங்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். //

நீங்கள் சொல்வது இந்த நாட்டில் கதைகளுக்கு ஏராளமான கருக்கள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் விட்டு விட்டு இன்றைய இயக்குனர்கள் மரங்களை சுற்றி காதலிப்பதையும் அரிவாளை எடுத்து வெட்டிக் கொள்வதையும் மட்டுமே காட்டிக் கொண்டிருப்பதால் ஒரே ஒரு பாரதிராஜாவுடனும் ஒரே ஒரு மணிரத்தினதுடனும் தமிழ் திரையுலகம் திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

SAKTHI said...

நன்று

Maximum India said...

நன்றி சக்தி!

Blog Widget by LinkWithin