Sunday, November 2, 2008

மும்பைக்கரும் கோவனும் விசுவநாதன் ஆனந்தும்


சில நாட்களுக்கு முன்னர், மும்பைக்கரும் கோவனும் என்ற சிறு கருத்துக் கதையை படித்தேன். அதன்படி, மும்பையைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் கோவாவில் வாழும் ஒரு மீனவரைச் சந்திக்கிறார். அவர்களிடையே நடைபெறும் உரையாடல் கீழே.

மும்பைக்கர்: நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?

மீனவர்: கடலில் மீன் பிடிக்கிறேன்.

மும்பைக்கர்: எவ்வளவு நேரம் மீன் பிடிக்கிறீர்கள்?

மீனவர்: சுமார் 5 மணி நேரம் கடலில் இருப்பேன். அந்த நேரத்தில் கிடைக்கும் மீன்களைப் பிடிப்பேன். மீதம் உள்ள நேரத்தில் மனைவி மக்களுடன் சந்தோசமாக இருப்பேன். மற்றும் நன்றாக தூங்குவேன் .

மும்பைக்கர்: நான் ஒரு அகமதாபாத் IIM பட்டதாரி. என்னால் உங்கள் வாழ்வு மேம்பட சில யோசனைகள் சொல்ல முடியும். அதாவது, நீங்கள் முதலில் உங்களது உழைக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். வங்கியில் கடன் பெற்று புதிய படகுகள் வாங்கி அவற்றில் அதிக மீனவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். மேலாண்மை விதிகளை உபயோகப் படுத்தி, தொழிலினை விரிவு படுத்த வேண்டும். ஒரு பெரிய நிறுவனம் ஆன பின்னே, பங்கு சந்தையில் உங்கள் நிறுவனத்தின் பங்குகளை வெளியிட வேண்டும். அதன் மூலம் மிகப் பெரும் பொருள் ஈட்ட முடியும்.

மீனவர்: இவ்வாறு செய்ய எத்தனை காலம் பிடிக்கும் ? அந்த பணத்தில் என்ன செய்ய முடியும்?

மும்பைக்கர்: இதை எல்லாம் செய்ய குறைந்தது 25 ஆண்டுகள் ஆகும். நீங்கள் ஈட்டிய பணத்தில் கோவாவில் கடல் ஓரம் ஒரு பெரிய வீடு வாங்க முடியும். பிறகு உங்கள் மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும். பொழுது போகாத நேரங்களில் மீன் பிடிக்க கடலுக்கு சென்று வரலாம்.

மீனவர்: நான் அதைத்தானே இப்போதும் செய்து வருகிறேன். இதற்கு ஏன் 25 வருடங்கள் காத்திருக்க வேண்டும்?

கண்ணை விற்று ஓவியம் வாங்க வேண்டுமா என்ற தமிழ் வழக்கினை ஒத்த இந்த கதை எனக்கு பிடித்திருந்தாலும் வாழ்வின் முன்னேற்றம் தேவை இல்லை என்ற பிற்பட்ட (Regressive) கொள்கையாகவும் இது எடுத்து கொள்ளப்படலாம் என்பதால் இதனை என் பதிவில் இட தயங்கினேன்.

அதே சமயம், இன்றைக்கு இந்தியாவின் ஒரே உலக சாம்பியன் விசுவநாதன் ஆனந்த் அவர்களைப் பற்றி படிக்கும் போது இந்த கதைக்கு வேறொரு விளக்கம் எனக்கு தோன்றியது.

மன அழுத்தம் மிகுந்த ஒரு விளையாட்டு போட்டியின் அனைத்து வடிவங்களிலும் தனது முத்திரை படைத்த விசுவநாதன் ஆனந்த் அவர்களால் ஸ்பெயின் நாட்டில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து மத்தாப்புகளுடன் தீபாவளி கொண்டாட முடிகிறது. மார்கழி மாத விழாக்களில் தமிழ் நாடு வர முடிகிறது. அங்கு குழந்தைகளுடன் செஸ் விளையாட முடிகிறது . ஒரு பக்கம் சூப்பர் ஹீரோவாக வெற்றிகளைக் குவிக்கும் ஒருவரால் இன்னொரு பக்கம் குழந்தை சிரிப்புடன் தன் வாழ்வின் மறுபக்கத்திலும் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.

வெற்றிகளை ஈட்ட மன அழுத்தம் தேவையில்லை. உழைப்பு மட்டுமே போதுமானது. சொந்த வாழ்வில் மகிழ்ச்சியோடு வாழ்ந்தும் ஒருவரால் தனது உழைப்பின் உதவியால் சிகரங்களை அடைய முடியும் என்பதை நமக்கு காட்டிய விசுவநாதன் ஆனந்துக்கு வாழ்த்துகளுடன் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வோம்.


நன்றி.

4 comments:

d_ram said...

i agree with you

Maximum India said...

Thank you for your commments ram!

KARTHIK said...

ஒப்பீடு அருமை
அந்தக் கதையை நீங்க சொன்ன விதம் நல்லாருந்துது

Maximum India said...

பின்னூடத்திற்கு நன்றி கார்த்திக்

Blog Widget by LinkWithin