Tuesday, November 11, 2008

இந்திய மென்பொருட் துறையை எதிர் கொண்டுள்ள சவால்களும் காத்திருக்கும் வாய்ப்புகளும்


1991 க்கு பிறகு அசுர வளர்ச்சி அடைந்து இப்போது உலகின் பின் அலுவலகம் (Back Office) இந்தியா என்று பெயர் எடுக்க வைத்த இந்திய மென்பொருட் துறை (இப்போதைய) மாறியுள்ள பொருளாதார சூழ்நிலைகளால் கடும் சவால்களை எதிர் கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது. இந்தியாவின் முக்கிய அந்நிய செலவாணி ஈட்டும் துறையான மென்பொருட் துறை சந்திக்கும் சவால்களைப் பற்றி இங்கு முதலில் விவாதிப்போம்.

உலகப் பொருளாதாரத் தேக்க நிலை.

வரும் ஆண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சி சென்ற சில வருடங்களை விட மிக குறைவாக இருக்கும் என IMF, உலக வங்கி போன்ற உலக அமைப்புகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக, நம்மிடமிருந்து மென்பொருள் இறக்குமதி மிக அதிகமாக செய்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பது குறிப்படத் தக்கதாகும்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பன்னாட்டு வங்கித் துறையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக BFSI என அழைக்கப் படும் மென்பொருட் துறையின் (இது வரை மிக அதிக வளர்ச்சி கண்டு கொண்டிருந்த) பிரிவு வெகுவாக பாதிக்கப் படும் எனவும் தெரிகிறது. சில நிறுவனங்களிடம் இருந்து வர வேண்டிய தொகையை வசூல் செய்வதற்காகவே ஒரு தனி துறையை ஏற்படுத்த வேண்டி இருப்பதாக மென்பொருள் நிறுவனத்தில் பணி புரியும் நண்பர் ஒருவர் கூறினார்.

புதிய அமெரிக்க அதிபர் ஒபாமா

ஒபாமா அவுட்சோர்சிங்க்கு எதிரானவர் எனக் கூறப் படுகிறது. அவுட்சோர்சிங் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் எனவும் செய்யாத நிறுவனங்களுக்கு குறைந்த வரி விதிக்கப்படும் என்றும் தனது தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. மேலும், அமெரிக்காவில் உள்ள வேலைகளில் பெரும்பாலானவை அமெரிக்கர்களுக்கே வழங்கப் பட வேண்டும் எனக் கூறி இருப்பது அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கும்.

அதிகரித்து வரும் செலவினங்கள்

இந்திய மென்பொருட் துறையில் ஊழியர்களின் சம்பளங்கள் கடந்த சில ஆண்டுகளில் மிகவும் அதிகரித்து உள்ளது. அதிகப் படியான ரியல் எஸ்டேட் விலை மற்றும் அரசின் MAT மற்றும் இதர வரி விதிப்பு இத்துறையின் செலவு அடிப்படையிலான போட்டியிடும் தன்மையை (Cost Competitiveness) வெகுவாக பாதித்து உள்ளன. அதுவும் கடும் பண நெருக்கடியில் சிக்கியுள்ள பல வெளி நாட்டு வாடிக்கையாளர்கள் (நிறுவனங்கள்) இந்திய மென்பொருள் நிறுவனங்களை சேவைக்கான விலையை (Charges) குறைக்க கோரி வரும் இந்த காலகட்டத்தில் இந்திய நிறுவனங்களால் தமது செலவுகளை கட்டுப் படுத்த முடியாமல் போனால் வாடிக்கையாளர்களை இழப்பது அல்லது பெரும் நஷ்டட்டதை சந்திப்பது என்ற நெருக்கடியான சூழல் உருவாகும்.

நாணய சந்தையில் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் எடுத்த நிலை.

உலகை (பொருளாதார ரீதியாக) அழிக்க வந்த ஆயுதங்களாக கருதப் படும் Derivatives இல் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் (தக்க முன் அனுபவம் இல்லாமல்)வியாபார ரீதியாக எடுத்துள்ள நிலை இந்நிறுவனங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுத்தும் எனவும் நிதித் துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலே குறிப்பிட்டுள்ள சவால்களை சந்திக்க வேண்டிய இந்த தருணத்தில் சில சாதகமான விஷயங்களும் தென்படுகின்றன. அவையாவன.

இன்றைய பொருளாதார தேக்க நிலையில் தமது செலவுகளைக் குறைக்க வேண்டிய பன்னாட்டு நிறுவனங்கள் (ஒபாமா போன்றவர்களின் தடங்கல்களையும் மீறி) இந்தியா போன்ற நாடுகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். பழைய ஒப்பந்தங்களை தக்க வைத்துக் கொள்ளவும் புதிய சேவைகளுக்கான ஒப்பந்தங்களை பெறவும் இந்திய நிறுவனங்கள் தமது சேவை உற்பத்தி செலவுகளை குறைப்பது மட்டுமல்ல புதிய உத்திகளை (Innovation) கையாளவும் வேண்டி இருக்கும்.

நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு வேகமாக குறைந்து வரும் இந்த காலக் கட்டத்தில் அந்நிய செலாவணியை பெருமளவு ஈட்டித் தரும் துறையான மென் பொருட் துறைக்கு அரசு புதிய சலுகைகள் அளிக்க வேண்டி இருக்கும்.

மிக அதிக அளவிலான முதல் தலைமுறை திறமையாளர்களைக் கொண்டுள்ள இந்தத் துறை தன்னை மேலே குறிப்பிடப் பட்ட சவால்களை எதிர் கொள்ளும் அதே சமயத்தில் காத்திருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு, தனது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை அடையுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.



நன்றி

4 comments:

ஆட்காட்டி said...

மற்றவனுக்கு செய்யுறத விட சொந்தமாச் செய்தா பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

Maximum India said...

அன்புள்ள ஆட்காட்டி

நீங்கள் சொல்வது கூட ஒருவகையில் சரிதான்

KARTHIK said...

// ஒபாமா அவுட்சோர்சிங்க்கு எதிரானவர் எனக் கூறப் படுகிறது.//

இந்த வருஷம் பெரும்பாலான கல்லூரிகளுக்கு கேம்பஸ் இன்டர்விவ்வுக்கு எந்த நிறுவனங்களும் வரவில்லை.போதாக்குறைக்கு போனவருசம் செலட்டானவிங்களுக்கும் இன்னும் வேலை வந்து சேரவில்லை.இதுனால இப்போ படிக்குற பசங்க எதிர் காலம் பற்றி ரொம்ப கவலைப்படுறாங்க.

இந்த மந்த நிலை விரைவில் மாறவேண்டும்

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டதிற்கு நன்றி

//இந்த வருஷம் பெரும்பாலான கல்லூரிகளுக்கு கேம்பஸ் இன்டர்விவ்வுக்கு எந்த நிறுவனங்களும் வரவில்லை.போதாக்குறைக்கு போனவருசம் செலட்டானவிங்களுக்கும் இன்னும் வேலை வந்து சேரவில்லை.இதுனால இப்போ படிக்குற பசங்க எதிர் காலம் பற்றி ரொம்ப கவலைப்படுறாங்க.

இந்த மந்த நிலை விரைவில் மாறவேண்டும்//

உங்க கவலை நியாயமானதுதான்

சீக்கிரமே இந்த நிலை மாறும் என்று நம்புவோம்

Blog Widget by LinkWithin